போட்டாச்சு புது ரூல்ஸ்.. பெங்களூரில் கடும் "கட்டுப்பாடுகள்!" கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் அமல்
பெங்களூர்: கொரோனா நோய் பரவல் காரணமாக பெங்களூரில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நேற்று ஒரே நாளில் பெங்களூரு நகரில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
நாளுக்குநாள் இதுபோல பாதிப்பு கூடிக்கொண்டே இருப்பதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கர்நாடக அரசு.

ரெஸ்டாரண்ட்
புதிய விதிமுறைகள் ஏப்ரல் 7ஆம் தேதி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி உணவகங்கள் மற்றும் மது பப் போன்றவற்றில் அதிகபட்சம் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முன்பு முழு அளவிலான வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட கர்நாடக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இப்போது அதை மாற்றி அமைத்துள்ளது.

மூடப்படும் என எச்சரிக்கை
ரெஸ்டாரன்ட்கள் மற்றும் பப் போன்றவற்றில் சானிட்டைசர்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் முக கவசம் இருக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்தாவிட்டால், நோய் தொற்று காலம் முடிவடையும்வரை அவை முழுமையாக மூடப்படும். திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று உறுதியாக உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக அரசு.

ஜிம்கள்
உடற்பயிற்சி கூடங்களை முழுமையாக மூட வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில், எதிர்ப்புகள் காரணமாக தற்போது அதில் சிறு மாற்றம் செய்துள்ளது. 50% பேரை மட்டும் உடற்பயிற்சி கூடத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்கள் திறந்திருக்கும்
பெரிய அளவிலான மத வழிபாட்டு சடங்குகள் விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் கூட்டம் கூட்டமாக செல்லாமல் தனி நபர்களாக பக்தர்கள், செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பு
அதேநேரம் பெங்களூரில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுபயன்பாட்டு பகுதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பகுதிகள் உள்ளிட்டவை அடங்கும்.

தியேட்டர்கள்
திரையரங்குகளில் அதிகபட்சமாக 50% ரசிகர்களுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100% ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நடைபெற்றுவந்த பள்ளி வகுப்புகள் மூடப்படுகின்றன. 10 முதல் 12 ஆம் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே உள்ள வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications