எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ல் நடைபெறும்: சிம்லாவுக்கு பதிலாக பெங்களூர்! காரணம் என்ன?
பெங்களூர்: எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். ஏற்கனவே சிம்லாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் பெங்களூரில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் பற்றி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று அறிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், சிம்லாவிற்கு பதிலாக பெங்களூரில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications