பெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது
பெங்களூரு கலவரம் தொடர்பாக முக்கிய குற்றவாளி அதிரடி கைது செய்யப்பட்டார்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பெரும் கலவரத்திற்குக் காரணமானவராக கருதப்படும் சையத் சாதிக் அலி என்பவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் இன்று பெங்களூரில் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 11ம் தேதி இரவு பெங்களூரில் திடீர் கலவரம் வெடித்தது. பேஸ்புக்கில் முஸ்லீம்கள் குறித்து புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்டமூர்த்தியின் உறவினர் ஒருவர் போட்ட போஸ்ட்டால் ஏற்பட்டது இந்த கலவரம்.

எம்எல்ஏ வீட்டின் முன்பு நடந்த இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. ஒரு கும்பல் கேஜி ஹள்ளி மற்றும் டிஜே ஹள்ளி காவல் நிலையங்களைத் தாக்கியது. இதனால் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
80க்கும் மேற்பட்ட போலீஸார், பல பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. எம்எல்ஏவின் வீட்டிலும் தீவைப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்று அதிரடியாக பெங்களூரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் இறுதியில் சையத் சாதிக் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் கலவரத்தை திட்டமிட்டு நடத்திய முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறது.
இவர் ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார். கலவரம் நடந்த நாள் முதல் இவர் தலைமறைவாக இருந்து வந்தார். இன்று நடந்த என்ஐஏ சோதனையின்போது இரும்புக் கம்பிகள், ஏர்கன், துப்பாக்கித் தோட்டாக்கள், டிஜிட்டல் கருவிகள், டிவிஆர், மற்றும் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications