குளிரில் உறையப்போகும் பெங்களூர்.. வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக குறையப்போகுது.. மக்களே உஷார்
பெங்களூர்: பெங்களூர் நகரின் இரவு நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக குறைந்து மக்களை வாட்டி வதைக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்கும். அதேபோல் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் பனிப்பொழிவும் பல இடங்களில் தொடங்கி விடும். இதற்கு பெங்களூருவும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் குளிர் பெங்களூரில் பனிப்பொழிவு மற்றும் குளிர் மக்களை வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் பெங்களூர் தப்பவில்லை. நவம்பர் மாதம் வரை நார்மலாக இருந்து வந்த குளிர் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குளிர் அதிகரித்து வருகிறது. பெங்களூர் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக கடந்த வாரம் இருந்தது. இந்த வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பெங்களூரில் அடுத்த வாரத்தில் 12 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: ‛‛அடுத்த சில நாட்கள் சென்னையில் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் குளிர் அலை உள்ளது. இது பெங்களூருவின் வெப்பநிலையை குறைக்கும். காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மையத்தின் சிஎஸ் பட்டீல் கூறுகையில், ‛‛ பெங்களூர் நகரின் வெப்பநிலை இந்த வாரம் இன்னும் குறைய உள்ளது. இந்த வாரத்தில் இரவு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கலாம். தெளிவான வானம், வறண்ட காற்று, வடகிழக்கு காற்று உள்ளிட்டவற்றால் பெங்களூரில் குளிர் தற்போது அதிகரித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் டிசம்பர் மாதத்தில் இரவு நேரத்தில் வெப்பம் 12 டிகிரி செல்சியஸ் வரை குறைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பெங்களூர் நகரின் இரவு நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக மாறியுள்ளது. இதுதான் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பெங்களூரில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.












Click it and Unblock the Notifications