3,000 ஆபாச வீடியோக்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல்- மோடியின் முடிவுதான் என்ன? டிகே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்-ன் சிட்டிங் எம்பியும் ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. 2019-ம் ஆண்டு ஹாசன் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் சொத்துகளை வேட்பு மனுவில் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் எம்பி பதவியை கர்நாடகா உயர்நீதிமன்றம் பறித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்குப் போய் முட்டி மோதி எம்பி பதவியை மீண்டும் பெற்றவர் பிரஜ்வல்.

எஸ்டிஐ விசாரணை: தற்போது ஹாசன் லோக்சபா தொகுதியில் மீண்டும் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல். இத்தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் பல ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப் மற்றும் சிடிக்கள் மூலம் ஹாசன் தொகுதி முழுவதும் பரவியது. அந்த வீடியோக்களில் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் பதிவுகள் இடம் பெற்றிருந்தன. இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் சித்தராமையா அமைத்த எஸ்.ஐ.டி எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவில் பெங்களூர் கூடுதல் டிஜிபி பிஜய்குமார் சிங், மைசூர் எஸ்பி சீமா லடகர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவுக்கு பிஜய்குமார் சிங் தலைமை வகிப்பார். இத்தகவல்களை கர்நாடகா அரசு தலைமைச் செயலாளர் அம்பிகா தெரிவித்திருந்தார்.
குமாரசாமி கருத்து: ஜேடிஎஸ் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அக்கட்சியில் குமாரசாமி பிரிவினர் (பிரஜ்வல் சித்தப்பா தரப்பு) ஆதரித்து பேட்டி தந்து வருகின்றனர். முன்னாள் முதல்வரான குமாரசாமியோ, தப்பி ஓடிவிட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டிய எஸ்ஐடி அதிகாரிகளின் பொறுப்பு எனவும் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் போராட்டம்: மேலும் கர்நாடகா முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் பிரிவினர் போராட்டம் நடத்தினர். பெங்களூர் போராட்டத்தில் பிரிஜ்வல் ரேவண்ணாவின் உருவ படம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பிரஜ்வல் படத்தை துடைப்பம் மற்றும் காலணிகளால் அடித்தும் கோபத்தை பெண்கள் வெளிப்படுத்தினர்.
மோடியின் முடிவு என்னவோ?: இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பாக பெண்கள் ஆணையம் பல புகார்களை பதிவு செய்துள்ளது. ஆகையால் உள்துறை அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர்தான் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு ஜேடிஎஸ், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது. இனியும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடிஎஸ் நீடிக்க வேண்டுமா என்பதை அந்தக் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிதான் முடிவை தெரிவிக்க வேண்டும். மாநில பாஜக தலைவர்களும் தங்களது கருத்தை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார். ஆனால் கர்நாடகா பாஜக தலைவர்களோ, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications