பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு
பெங்களூர்: பெங்களூரில் புறநகர் மின்சார ரயில்கள் உரிய காலத்தில் அமைக்கப்படாதது இன்றைக்கு மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். பெங்களூர் மீளவேமுடியாத அளவிற்கு நெரிசலில் சிக்க, புறநகர் மின்சார ரயில் வசதிகள் இல்லாதது மட்டுமே முதன்மையான காரணம். விமான நிலையம், அற்புதமான சாலைகள், ஐடி நிறுவனங்கள் எல்லாமே இருந்தாலும், மக்கள் செல்ல உரிய ரயில் வசதிகள் இல்லை. பெங்களூரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த சிக்கல் தெரியும். எனவே முதல்வர் விஜய் அதேபோன்று சென்னையில் விமான நிலைய விவகாரத்தில் தவறு செய்துவிடக்கூடாது.
பெங்களுரில் நம்ம மெட்ரோ என்ற பெரியல் மெட்ரோ ரயில் நகரத்திற்குள் இருக்கும் குறுகிய தூரப் பயணிகளுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்களைக் கையாளும் திறன் புறநகர் மின்சார ரயில்களுக்கு மட்டும்தான் உண்டு.

சென்னை மற்றும் மும்பை நகரங்களில் ஐடி மற்றும் தொழிற்துறை அசுர வளர்ச்சி அடைவதற்கு முன்பே, ஆங்கிலேயர் காலத்திலேயே புறநகர் ரயில் பாதைகளைக் கொண்டு வந்துவிட்டன. இதனால் சென்னை, மும்பை புறநகர்ப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த செலவில், நெரிசலில் சிக்காமல் நகரத்திற்குள் வந்து போக முடிகிறது. ஆனால், பெங்களூரு அந்த வாய்ப்பைத் தவறவிட்டது.
பெங்களூருவில் 1990-களுக்குப் பிறகு ஐடி நிறுவனங்கள் அவுட்டர் ரிங்க் ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி, வொயிட் பீல்ட் போன்ற பகுதிகள் அசுர வேகத்தில் வந்தன. ஐடி நிறுவனங்கள் வருவதற்கு முன்பே, அங்கெல்லாம் இரயில் பாதைகளையும் பொதுப் போக்குவரத்தையும் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அன்றைய அரசு அதைச் செய்யத் தவறியதால், அங்கு குடியேறிய லட்சக்கணக்கான மக்களும் தங்களின் சொந்தக்காரர்கள் மற்றும் டூ-வீலர்களில் தான் சாலைகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவு, இன்று உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் இருக்கிறது.
பெங்களூருவுக்குப் புறநகர் இரயில் திட்டம் தேவை என்ற கோரிக்கை 1983-லேயே எழுப்பப்பட்டது. ஆனால், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு, நிலம் கையகப்படுத்துதல், மற்றும் தென்மேற்கு இரயில்வேயின் முட்டுக்கட்டைகள் காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.
148 கி.மீ நீளமுள்ள 'பெங்களூரு புறநகர் இரயில் திட்டத்திற்கு' முழுமையான ஒப்புதல் கிடைத்து பணிகள் தீவிரமடைவதற்குள் 2020-களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் நகரம் கையை மீறி வளர்ந்துவிட்டது. எனவே சென்னை பரந்தூர் விவகாரத்தோடு இதை இணைத்துப் பார்த்தால், உங்களுக்கு உண்மை புரியும். பெங்களூரு செய்த அதே தவறை சென்னை செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், பரந்தூர் ஏர்போர்ட் வருவதற்கு முன்பே, ₹15,906 கோடியில் பூந்தமல்லி டு பரந்தூருக்கான 53 கி.மீ மெட்ரோ ரயில் திட்டத்தை இப்போதே திட்டமிடுகிறார்கள்.
ஏர்போர்ட் ஆரம்பிக்கும் அன்றே மெட்ரோவும் தயாராக இருந்தால் மட்டுமே, சென்னை பெங்களூரு போல நெரிசலில் சிக்காமல் தப்பிக்கும். உள்கட்டமைப்பை முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றால் ஒரு நகரம் எப்படிச் சீரழியும் என்பதற்குப் பெங்களூரு ஒரு வாழும் உதாரணம். அதேபோல் சென்னை விமான நிலையம் என்பதும் மிக தாமதமான முடிவு தான்.
சென்னை அசுரத்தனமாக வளர ஆரம்பித்தது 2000க்கு பின்னர் தான். குறைந்தபட்சம் 2005ல் தொலைநோக்குடன் விமான நிலையத்தை ஆரம்பித்து இருந்தால் 2010க்கும் திறக்கப்பட்டிருக்கும். 2010ல் ஆரம்பித்திருந்தால் கூட 2020ல் முடிந்து திறக்கப்பட்டிருக்கும்.25 வருடம் தாமதம் காரணமாகவே பரந்தூர் தேர்வானது. இனி புதிய இடம் தேர்வு செய்தால் 2040க்கு மேல் ஆகிவிடும். அதன்பிறகு சென்னை பெரிய பாதிப்பையே சந்திக்கும்.












Click it and Unblock the Notifications