பாஜக 'ஆபரேஷன் தாமரை'- கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ100 கோடி பேரம்!
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க 'ஆபரேஷன் தாமரை' (Operation Kamala)யை பாஜக செயல்படுத்த தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்க ரூ50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக பேரம் பேசுவதாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் ரவிக்குமார் கவுடா.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா அரசு மீது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் அடுத்தடுத்த ஊழல் முறைகேடு புகார்களை முன்வைத்து வருகின்றன.

முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி தரக்கூடியதாக மூடா நில முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா 14 வீட்டு மனைகளை ஒதுக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்துள்ளார். இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதாவது, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆபரேஷன் தாமரையை பாஜக கையில் எடுத்துள்ளது. கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க தலா ரூ50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக தரப்பு பேரம் பேசி வருகிறது. ஆனால் பாஜகவின் இந்த பேரத்தை ஏற்க எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் முன்வரவில்லை.
என்னையும் தொலைபேசியில் அழைத்து பேரம் பேசினார்கள். ஆனால், ரூ100 கோடியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன். என்னிடம் பேரம் பேசியது பற்றி அமலாக்கத்துறையிடம் புகார் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கணிசமாக வளைத்து பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் இந்த திட்டம் நிச்சயமாக நிறைவேறாது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் ஷோபா கரந்தலாஜே, பிரகலாத் ஜோஷி, குமாரசாமி "கேங்"தான் கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 136 எம்.எல்.ஏக்களும் பாறை போல முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னால் ஆதரவாக நிற்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications