2 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ 500 நோட்டுகள்! கள்ளநோட்டுகளா? அசல் நாசிக் நோட்டுக்களா?நடந்தது என்ன?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ 500 நோட்டுகள் இருந்த சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த நோட்டுகள் போலி அல்ல என்றும் அவை ஒரிஜினல் நோட்டுகள் என்றும் தெரியவந்தது.
அந்த காலத்தில் முறுக்கு, அதிரசம், மிக்ஸர் உள்ளிட்டவை ஸ்னாக்ஸ் உணவு பொருளாக வீட்டிலேயே செய்யப்பட்டு குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் அன்றாடம் ஒரு சுண்டல், பயத்தமாவுகளில் செய்யப்படும் பலகாரம், கருப்பு உளுந்தில் செய்யப்படும் பண்டங்கள் என இருந்தது.
ஆனால் இன்று இவற்றையெல்லாம் செய்வதற்கு மக்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதனால் கடைகளில் கலர் கலராக விற்கும் பாக்கெட்டுகளை நாட மக்கள் விரும்புகிறார்கள். குழந்தைகளில் இருந்தே கண்களுக்கு வண்ணமயமான கலர்களை பார்த்து பார்த்து தற்போது இது போன்ற கலர் கலர் பாக்கெட்டுகளின் மீது மோகம் அதிகமாகிவிட்டது.

பாக்கெட்டுகள்
இந்த கலர் பாக்கெட்டுகளை பார்த்தவுடன் குழந்தைகள் அடம்பிடிப்பர் என தெரிந்தே கடை வாசலில் இந்த பாக்கெட்டுகள் தொங்கவிடப்படுகின்றன. ஒரு சில சிப்ஸ் பாக்கெட்டுகளில் சிப்ஸை விட காற்றுதான் அதிகமாக இருக்கிறது. சில சிப்ஸ்களின் விலை அதிகமாக இருக்கிறது. எல்லாம் ஒரே விதமான உருளைக்கிழங்குதான். ஆனால் மசாலாவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

அஜினோமோட்டோ
அஜினோமோட்டோ உள்ளிட்ட மசாலாக்களும் பிரசர்வேட்டிவ்களும் உடல் நலனுக்கு கேட்டை விளைவிக்கும் என ஒரு பக்கம் மருத்துவர்கள் அறிவுறுத்தி அறிவுறுத்தி அவர்களின் தொண்டை தண்ணீரே வற்றிவிட்டது. ஆனால் மக்கள் கேட்டபாடில்லை. ரூ 2 முதல் ரூ 90 வரை சிப்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குன்னூர் கிராமம்
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுர் தாலுக்காவில் அமைந்துள்ள குன்னூர் கிராமத்தில் முன்னணி நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க மக்கள் போட்டி போட்டு கொண்டு வரிசைக் கட்டி நிற்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென கேட்ட போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சிலருக்கு சிப்ஸ்களுடன் ரூ 500 நோட்டும் இருந்ததாக தெரிகிறது.

ரூ 500 முதல் ரூ 3000 வரை
ஒரு சில சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூ 500 முதல் ரூ 3000 வரை இருந்ததாக தெரிகிறது. 500 ரூபாய் நோட்டுகள் 1 முதல் 5 வரை சில பாக்கெட்டுகளில் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த கிராமத்தினர் உடனே கடைக்கு சென்று அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்க குவிந்தனர். இதனால் சிப்ஸ் பாக்கெட்டுகள் அந்த பகுதியில் விற்று தீர்ந்தது.

ஏமாற்றம்
சிலர் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர். முதலில் அந்த ரூபாய் நோட்டுகள் போலி என சொல்லப்பட்டது. ஆனால் அவை ஒரிஜினலான நாசிக்கில் அடிக்கப்பட்ட நோட்டுக்கள்தான் என்பது தெரியவந்தது. தங்கள் நிறுவன சிப்ஸை விளம்பரப்படுத்த இப்படி செய்திருக்கலாம் என தெரிகிறது.

சின்ன மீனை போட்டு பெரிய மீன்
இதுவும் ஒரு விளம்பர யுத்திதான். சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுப்பது போன்றதுதான். அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்ததோ குறைந்த எண்ணிக்கையிலான நோட்டுகள்தான். ஆனால் அதன் விற்பனையோ நிறுவனம் செலவிட்ட நோட்டுகளை தாண்டியிருக்கலாம் என்கிறார்கள் சிலர். இதுவரை அந்த நிறுவனம் ரூ 20 ஆயிரம் செலவிட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் இது போன்ற விளம்பரத்தால் அந்த ரூ 20 ஆயிரத்தை காட்டிலும் சிப்ஸ் பாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. வெறும் ரூ 2- க்கு விற்பனை செய்யப்பட்ட அந்த சிப்ஸ் பாக்கெட்டில் ஒரு 500 ரூபாய் கிடைத்தாலே அதிர்ஷ்டம்தானே. இனியும் இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூபாய் நோட்டுகள் இருக்கும் என்ற எண்ணத்துடன் அந்த பாக்கெட்டுகளை வாங்கி வியாபாரத்தை அதிகரிப்பர் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications