எங்க ஆட்சி அவ்வளவு சீக்கிரம் கவிழாது.. பகல் கனவு காணாதீங்க.. எடியூரப்பாவிற்கு ஜேடிஎஸ் பதிலடி
பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி அரசு விரைவில் கவிழும் என்ற, பா.ஜ மாநில தலைவர் எடியூரப்பாவின் கணிப்பு பகல் கனவாகவே முடியும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் கடும் அதிருப்தியில் இருப்பதாக எடியூரப்பா கூறுவது கற்பனையானது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 1 எம்.எல்.ஏ-வை கூட பாரதிய ஜனதாவால் இழுக்க முடியாது என்று அக்கட்சி கூறியுள்ளது.

ஏராளமான இடையூறுகள் மற்றும் சதிதிட்டங்களை சமாளித்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை முறியடித்து குமாரசாமி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இனியும் அவரது ஆட்சி தான் தொடர்ந்து நடக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரத்தையும், பணபலத்தையும் வைத்து கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என பாரதிய ஜனதாவினர் கூறிவருவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்றோடு, பாரதிய ஜனதாவின் கொட்டம் அடங்கிவிடும்.
பெரிய இழப்புகளை அன்று அக்கட்சி தேசியளவில் சந்திக்கும் என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் கூறியுள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசில் அதிருப்தி நிலவுவதாக எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
மக்களவை தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவுவதாக கூறியிருந்தார். அதிருப்தி அதிகரித்துள்ளதால் அந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாரதிய ஜனதா கர்நாடகத்தில் விரைவில் ஆட்சிக் கட்டிலில் அமரும் என எடியூரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications