மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.. சூரிய கிரகணத்தின்போது குழந்தைகளை மண்ணில் புதைப்பு
Recommended Video
பெங்களூர்: மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு. சூரிய கிரகணத்தின் போது குழந்தைகளை கழுத்து அளவுக்கு மண்ணில் புதைத்து வைத்தால் ஆரோக்கியமாக இருப்பர் என்ற மூட நம்பிக்கையால் பலர் தங்களது குழந்தைகளை புதைத்து வைத்தனர்.
நிலவு பூமியையும் பூமி சூரியனையும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிலவு, சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போதுதான் சூரிய கிரகணம் ஏற்படும்.
அதாவது நிலவின் நிழல் பூமி மீது விழும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முன்பகல் 11.15 மணி வரை நிகழ்ந்தது. இதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

தலை குளிப்பது
பொதுவாக சூரிய கிரகணம் என்றில்லை எந்த கிரகணமாக இருந்தாலும் பெரும்பாலானோர் கிரகணம் முடிந்த பிறகோ அல்லது கிரகணத்துக்கு முன்போ சாப்பிடுவது வழக்கம். மேலும் கிரகணம் முடிந்த பிறகு அனைவரும் தலைக்கு குளிப்பர். வீடுகளையும் பெருக்கி துடைப்பர்.

சுவாமி தரிசனம்
கிரகணத்தின் போது கோயில்களின் நடை சாத்தப்பட்டு அது முடிந்தவுடன் கோயில் முழுவதும் தண்ணீர் போட்டு துடைப்பர். பின்னர் கோயிலில் சில பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

மூட நம்பிக்கை
மேலும் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது. அவர்கள் மீது சூரிய வெளிச்சம் படக் கூடாது என்றெல்லாம் கூறுவர். சூரிய கிரகணம் என்பது ஒரு அறிவியல் நிகழ்வு என்பதால் இந்த சமயத்தில் அது போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

சிறுவர்கள்
ஆனால் கர்நாடகாவில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கழுத்தளவுக்கு மண்ணில் புதைத்து வைத்தால் அவர்களை நோய் நொடிகள் அண்டாது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. கர்நாடகாவின் கல்புர்கியில் உள்ள தாஜ்சுல்தான்பூரில் 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் ஒரு பெண் குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் கிரகணத்தின் போது புதைத்து வைத்தனர்.

மூடபழக்கம்
பின்னர் கிரகணம் முடிந்த பிறகு அவர்களை வெளியே எடுத்தனர். இவ்வாறு செய்தால் தோல் நோய், உடல் ஊனமாதல் ஏற்படாது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அக்குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். எத்தனை அறிவியல் அறிஞர்கள் அறிவுரை கூறினாலும் மக்கள் இது போன்ற மூடபழக்கங்களிலிருந்து எப்போதுதான் விடுபடுவரோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications