பைக் ஸ்டண்ட் செய்த பெங்களூர் டிடிஎஃப் - மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிய மக்கள்
பெங்களூர்: பைக்கர்ஸ் ரேஸ், ஸ்டண்ட் ரீல்ஸ் வீடியோக்கள் தான் சமூகவலைதளங்களில் அதிகம் வைரலாகும். ஆனால் கர்நாடகா மாநிலத்தில் ஊர் மக்கள் ஒரு மேம்பாலத்தில் இருந்து இரண்டு பைக்குகளை கீழே வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களின் கோபத்துக்கு என்ன காரணம், பைக் ரைடர்ஸ் அப்படி என்ன செய்தார்கள்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் நிலவும் பகுதியாக பெங்களூர் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கடுப்புடனும், எரிச்சலுடனும் தான் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். இது பெங்களூரில் மட்டுமல்ல, கர்நாடகாவின் பல பகுதிகளிலும் இதே நிலை தான். போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியாக இருக்கும் அதே இடத்தில், டி.டி.எஃப் வாசன் போன்ற ஸ்டண்ட் காட்டும் பைக் ரைடர்ஸ்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முன்பெல்லாம் வீக் எண்ட்களில் மட்டுமே இந்த ரேஸ், ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் நடக்கும். இப்போது போக்குவரத்து பிஸியாக உள்ள வார நாட்களிலும் பைக்கர்ஸ்களின் அட்ராசிட்டி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெங்களூர் சிட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால், இந்த ரைடர்கள் புறநகர் பகுதிகளில் படையெடுத்து பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுகின்றனர்.

பெங்களூர் சிட்டியில் இருந்து எட்டு இளைஞர்கள் நான்கு இரு சக்கர வாகனங்களில் புறநகர் பகுதியான நீலமங்கலாவுக்கு சென்றுள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். கியர் இல்லாத ஸ்கூட்டர்களில் சென்ற இளைஞர்கள், வாகனங்களை அஜாக்கிரதையாக ஓட்டி ஸ்டண்ட்களில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். இவர்களின் செயல்களால் மற்ற வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் டுமக்கூர் கிராமத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
மக்கள் புலம்பியபடி சென்று கொண்டிருக்க, ஸ்டண்ட்டில் ஈடுபட்டிருந்த வாகனம் அங்கு வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது வாகன ஓட்டிகளையும், டுமக்கூர் கிராம மக்களையும் கோபமடைய செய்தது. ஆத்திரமடைந்த மக்களும், வாகன ஓட்டிகளும் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அதில் இருந்த இரண்டு பைக்குகளை 30 அடி உயரம் பாலத்தில் இருந்து கீழே போட்டுவிட்டனர். பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இந்தக் காட்சிகளை அங்கிருந்த மக்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக நீலமங்கலா போக்குவரத்து போலீஸ் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இந்த சம்பவம் பெங்களூர் - டுமக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. பெங்களூர் இளைஞர்கள் வீக் எண்ட், காலை மற்றும் நள்ளிரவு வேளைகளில் நெடுஞ்சாலையில் பயணித்து பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் ரோந்து குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணித்து கொண்டிருக்கிறோம். இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பைக் ரைடர்களின் ஸ்டண்ட் பிரச்னை அதிகரித்து வருவதால் பெங்களூர் போலீஸ் நேற்று முன்தினம் அங்கு திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது ஏர்போர்ட் சாலையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட 44 ரைடர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications