அடுத்த வருஷ தேர்தலுக்கு அச்சாரம்... நாளை கர்நாடகாவில் மோடி உரையுடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் நாளை சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையை பெற 113 எம்.எல்.ஏக்கள் தேவை.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. ஜேடிஎஸ் என்கிற மதச்சார்பற்ற ஜனதா தளம் 3-வது கட்சியாக களத்தில் இருக்கிறது. கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜாதிய வாக்குகள் பிரதான அம்சமாக உள்ளன.

கர்நாடகா நிலவரம்
கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களாக லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் உள்ளனர். லிங்காயத்துகள் பொதுவாக பாஜக வாக்கு வங்கியாக உள்ளனர். ஒக்கலிகா கவுடாக்கள், ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கான வாக்கு வங்கிகள். ஆனால் கடந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியை கை கழுவ தொடங்கி விட்டனர் ஒக்கலிகா கவுடாக்கள். அதனால் இம்முறை காங்கிரஸ் மிகப் பெரும் ஆதாயம் அடையும் என கூறப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு
இந்த நிலையில் நாளை கர்நாடகாவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. பெங்களூருவில் நாளை முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 80 க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெற உள்ளன.

300 நிறுவனங்கள்
குமாரமங்கலம் பிர்லா, சஜ்ஜன் ஜிந்தால், விக்ரம் கிர்லோஸ்கர் உள்ளிட்ட பல பெரும் தொழிலதிபர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் கண்காட்சியும், வெளிநாட்டு நிறுவன அமர்வுகளும் நடைபெற உள்ளன.

பிரதமர் மோடி உரை
பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உயர் மட்ட அதிகாரிகளும், தொழில்துறை வல்லுனர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை தொடக்க உரையாற்ற உள்ளார்.












Click it and Unblock the Notifications