டீசல் திருட்டு கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட காவலர்... சுட்டுப்பிடித்த போலீசார்.. பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் காவலர் கையை வெட்டிய டீசல் திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் நாடு முழுவதும் வாகனங்களில் எரிபொருள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அப்படி ஒரு டீசல் திருடும் கும்பல்தான் ஓசூர் அருகே கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்று சிக்கி இருக்கிறது.

தொடரும் டீசல் திருட்டு
கர்நாடகாவின் ஜிகினி நகரம் தமிழ்நாட்டின் ஓசூருக்கு மிக அருகாமையில் உள்ளது. அங்குள்ள கே.இ.பி சந்திப்பு பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சரக்கு லாரிகளில் டீசல் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இது தொடர்பாக ஜிகினி காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்துள்ளன.

இரவு நேர ரோந்தில் பிடிபட்ட கும்பல்
இதனை தடுக்க ஜிகினி காவல் நிலைய ஆய்வாளர் சுதர்சன் தலைமையிலான போலீசார் கே.இ.பி. சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரம் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஒரு டீசல் திருட்டு கும்பல் சாலையோரத்தில் நின்றிருந்த லாரிகளில் டீசல் எடுத்துக் கொண்டிருந்ததை கண்ட கர்நாடக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர்.

வெட்டுப்பட்ட காவலர்; சுடப்பட்ட திருடன்
இதை சற்றும் எதிர்பார்க்காத டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த கோடேஷ், ஒரு காவலரை ஆயுதங்களால் தாக்கியது. இதில் காவலரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. உஷாரான காவல் நிலைய ஆய்வாளர் சுதர்சன் தனது துப்பாக்கியால் திருட்டு கும்பலை நோக்கி சுட்டதில் திருட்டு கும்பலை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற ராஜுவுக்கு இடது காலில் குண்டு பாய்ந்து. படுகாயமடைந்த ஸ்ரீநிவாஸ் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

இருவரிடம் விசாரணை
படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருட்டு கும்பல் தாக்கி கையில் வெட்டுப்பட்ட காவலரையும் போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பிடிபட்ட ஸ்ரீநிவாசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு முக்கியத் தகவல்களை அளித்து உள்ளார். அதன் பேரில் டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த மல்லன கவுடா என்பவரை ஜிகினி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீசல் கேன்கள் பறிமுதல்
தலைமறைவான டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தேடும் பணியில் கர்நாடக மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் டீசல் நிரப்பிய ஏராளமான கேன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications