நீங்களே இப்படி பண்ணுனா யாரை நம்புறது.. மாமனார், மாமியார் சேர்ந்து.. பெண் டாக்டர் வழக்கில் திருப்பம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெல்காம் (பெலகாவி) பெண் மருத்துவர் ரேணுகா கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை இல்லாததால், ரேணுகாவை கொலை செய்துவிட்டு, அவரது கணவருக்கு மறுமணம் செய்ய மாமியார், மாமனார் மற்றும் கணவர் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி?
மருத்துவர் ரேணுகாவுக்கும், இன்ஜினியர் சந்தோஷுக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், சந்தோஷின் பெற்றோர் அவருக்கு மறுமணம் செய்ய விரும்பினர். இதற்காக ரேணுகாவை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். மே 24ஆம் தேதி ரேணுகாவை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மாமியார் ஜெயஸ்ரீ, இரவு நேரத்தில் வேண்டுமென்றே அவரை பஸ் நிறுத்தத்தில் விட்டுச் சென்றார். பின்னர் தனது கணவர் காமண்ணாவை வரவழைத்து, பைக்கில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
வரும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில், நடுவில் அமர்ந்திருந்த ஜெயஸ்ரீ, பின்னால் ஓரமாக அமர்ந்திருந்த ரேணுகாவை ஓடும் பைக்கிலிருந்து தள்ளிவிட்டார். கீழே விழுந்த ரேணுகாவை, அவரது மாமனார் காமண்ணா கல்லால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சேலையின் முந்தானையை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பெரிய அறிவாளி என நினைத்து, கொலையை சாலை விபத்து போல் காட்ட முற்பட்டு, ரேணுகாவின் உடலை பைக்கில் இழுத்துச் சென்றுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த அறிக்கையில், ரேணுகா சாலை விபத்தில் இறக்கவில்லை என்றும், தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.
கணவர் உட்பட மூவர் கைது
விசாரணையில், ரேணுகாவின் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது உறுதியானது. இந்த சதித்திட்டத்தில் கணவர் சந்தோஷுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து சந்தோஷ் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications