தினமும் 3 பேராவது டிடெக்டிவ் ஆபீசுக்கு போறாங்க.. இப்போ இதுதான் டிரெண்ட்! கல்யாணத்துக்கு முன்பு SPY
பெங்களூர்: திருமணத்துக்கு முன்பே தங்களுக்கு வரப்போகும் வருங்கால கணவன், மனைவி நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை அறிய தனியார் ஏஜென்சிகளை வைத்து விசாரிப்பது பலமடங்கு அதிகரித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
திருமணம்.. வெவ்வேறு இல்லங்களில் வசித்து ஆணும், பெண்ணும் ஒன்றாக சேரும் விழா. அதுமட்டுமின்றி ‛‛உனக்கு நான், எனக்கு நீ’’ என்று இருவருக்கும் ஒரு துணையை திருமணம் தான் வழங்குகிறது. திருமணத்துக்கு பெண் தேடும்போதும் சரி, மாப்பிள்ளை தேடும்போதும் சரி அதிக கவனம் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் இருமணங்கள் திருமணத்தில் இணைந்தாலும் கூட வாழ்க்கை என்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது. இதனால் தான் நம் ஊர்களில் திருமண பேச்சு வரும்போதே பெண், மாப்பிள்ளை பற்றி அக்கம்பக்கத்தினரிடம், தெரிந்தவர்களிடம் விசாரித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்பார்கள்.
ஆனால் பெரிய பெரிய நகரங்களில் திருமணம் செய்யப்போகும் பெண் பற்றியும், மாப்பிள்ளை பற்றியும் இருகுடும்பத்தினரால் உடனடியாக விசாரிக்க முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க பல்வேறு ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏஜென்சிகளிடம் கூறினால் போதும் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கும் சம்பந்தப்பட்ட பெண், மாப்பிள்ளை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து கொடுத்துவிடுவார்கள். இது பாசிட்டிவ்வாக இருந்தால் திருமணம் நடக்கும். நெகட்டிவாக இருந்தால் திருமணம் நடக்காது.
இந்நிலையில் தான் பெங்களூரில் தற்போது திருமணம் செய்யும் ஆண், பெண் அல்லது அவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு வரப்போகும் மனைவி, கணவன், மருமகன், மருமகள் பற்றி விசாரிக்க தனியார் ஏஜென்சிகளை நாடுவது என்பது அதிகரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் மணப்பெண், மணமகன் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர் பற்றியும் விசாரிப்பது அதிகரித்துள்ளது. பல ஏஜென்சிகளில் மணப்பெண், மணமகன் பற்றி விசாரித்து தகவல் அளிக்க கோரி செல்வோரின் எண்ணிக்கை என்பது 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
பெங்களூர் எம்ஜி ரோட்டில் உள்ள வீனஸ் டிடெக்டிவ் ஏஜென்சியை மட்டும் தினமும் 2 முதல் 3 பேர் வரை அணுகி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டுக்கு முன்பு இந்த ஏஜென்சியை வாரத்துக்கு 2 அல்லது 3 பேர் மட்டுமே தொடர்பு கொண்ட நிலையில் தற்போது தினமும் 2 முதல் 3 பேர் அணுகி வருகின்றனர்.
அதேபோல் பெங்களூர் உள்பட நம் நாட்டின் முக்கிய 10 நகரங்களில் இந்தியா கன்சல்டன்சி செயல்பட்டு வருகிறது. இங்கு சராசரியாக மாதம் 30 பேர் வரை அணுகி தங்களின் வருங்கால கணவன், மனைவி பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். இதுபற்றி அதன் இயக்குநர் நமன் ஜெயின் கூறியதாவது:
‛‛பெங்களூரில் பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். இளைஞர்கள், இளம்பெண்கள் பெங்களூரில் சுதந்திரமாக உள்ளனர். பெற்றோர்களை விட்டு தனியே வாழ்கின்றன. இதனால் பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் பார்ட்னர்கள் மீது சந்தேகம் உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த சந்தேகம் என்பது 90 சதவீதம் உண்மையாகி உள்ளது’’ என்றார்.
இந்த ஏஜென்சியில் பணியாற்றும் பெண் ஒருவர் கூறுகையில், ‛‛பெங்களூரில் விசாரிக்கும்படி கூறியவர்களிடம் 70 சதவீத ஆண்கள் தங்களுக்கு விவாகரத்து நடந்ததையும், ஏற்கனவே திருமணம் நடந்ததையும் மறைத்துள்ளனர். இந்த தகவல்களை மறைத்து அவர்கள் திருமணம் செய்ய முயன்றதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்’’ என்று திடுக்கிடும் தகவலை கூறினார்.
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் உள்ள பெங்களூர் டிடெக்டிவ்ஸ் ஏஜென்சியை மாதம் 20 பேர் வரை அணுகி வருகின்றன. இதுபற்றி அந்த ஏஜென்சியில் பணியாற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் டிகே கிரி கூறுகையில், ‛‛பெண் வீட்டார் என்றால் மாப்பிள்ளையாக பார்க்கப்பட்ட நபரின் சம்பளம், அவர்களின் குடும்பத்தின் சொத்து விபரம், மாப்பிள்ளையின் குணம், கல்வி, உடல்நலம் குறித்த விபரங்களை கேட்கிறார்.அதில் ஆண்கள் தங்களின் படிப்பை அதிகமாக கூறிவிடுகின்றனர். அதேபோல் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கினால் ரூ.2 லட்சம் என்று கூறியுள்ளனர்’’ என்றார்.
பெங்களூரை பொறுத்தவரை மணப்பெண், மணமகன் குறித்து திருமணத்துக்கு முன்பே விசாரிக்க வேண்டும் என்றால் தனியார் ஏஜென்சிகள் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை வாங்குகின்றனர். இந்த தொகை என்பது பிரைமலி, மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், அல்ட்ரா வெல்த்தி குடும்பத்தை பொறுத்து மாறுபடும். சில ஏஜென்சிகள் லோவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் ரூ.10 ஆயிரம் வாங்கி விசாரித்து தகவல்களை வழங்குகின்றன. இந்த விசாரணைக்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications