மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு! பெங்களூரில் தனியார் வாகன சங்கங்கள் ஸ்டிரைக்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு தனியார் வாகன சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் பெங்களூரில் வேலை நிறுத்த (பந்த்) போராட்டத்தில் இறங்கியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ்+ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி இருந்த நிலையில், சில எம்எல்ஏக்கள் பாஜக வசம் சென்றால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு பாஜக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து சமீபத்தில் நடைபெற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது காங்கிரஸ் பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 5 முக்கியமான வாக்குறுதிகள் பேசுபொருளாயின. இதில் ஒன்றுதான் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்.

தமிழ்நாட்டில் இந்த திட்டம் பெரும் வெற்றியடைந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும் இந்த திடத்திற்கு பரவலான வரவேற்பு இருந்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம், தனியார் வாகன சங்கங்கள் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூரை பொருத்த அளவில் அரசு பேருந்துகள் இருந்தாலும், மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தனியார் வாகனங்கள் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆட்டோக்கள், டாக்சிகள், விமான நிலைய டாக்சிகள், மேக்சி வண்டிகள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஸ்டேஜ் கேரேஜ்கள் ஆகியவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இப்படி இருக்கையில் மகளிருக்கான இலவச பேருந்து (சக்தி திட்டம்) திட்டத்தை அரசு அறிவித்தது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தனியார் வாகன சங்கங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த பேச்சுவார்த்தையில், தனியார் பேருந்துகளிலும் இந்த சக்தி திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். தனியார் வாகனங்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
ஆனால் இந்த கோரிக்கைகளை அரசு தரப்பில் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் வாகன சங்கங்கள் இன்று ஒரு நாள் பந்தை அறிவித்துள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12 மணி தொடங்கி இரவு 12 மணி வரை தனியார் ஆட்டோக்கள், டாக்சிகள், விமான நிலைய டாக்சிகள், மேக்சி வண்டிகள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஸ்டேஜ் கேரேஜ்கள் போன்றவை இயங்காது. பெரும்பாலான பள்ளி/கல்லூரி மாணவர்கள் தனியார் வாகனங்களை நம்பிதான் இருக்கிறார்கள்.
எனவே சில பள்ளிகள் இன்று விடுமுறையை அறிவித்துள்ளன. அதேபோல இந்த பந்தை சமாளிக்க அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கியுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் தனியார் வாகனங்களும் இந்த பந்தில் பங்கேற்றுள்ளதால் விமான நிலையத்திற்கு கூடுதல் பேருந்துகளை கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பந்தில் சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் தனியார் வானங்கள் பங்கேற்றிருக்கலாம் என்று 34 சங்கங்களை உள்ளடக்கிய தனியார் வாகன சங்கம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications