புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்- அதிகாலை 4 மணிவரை அஞ்சலி செலுத்தினர் ரசிகர்கள்!!
பெங்களூர்: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடகா அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கன்டீரவா ஸ்டுடியோவில் தந்தை ராஜ்குமாரின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கன்டீரவா மைதானத்தில் கொட்டும் மழை, கடும் பனிக்கு இடையே இன்று அதிகாலை 4 மணி வரை ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்
கன்னட திரை உலகில் பவர் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். தென்னிந்திய திரை உலக ஜாம்பவான்களில் ஒருவரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார்.

புனித் ராஜ்குமார் மரணத்தால் அதிர்ச்சி
புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். 46 வயதே ஆன புனித் ராஜ்குமார் உடல்நலன் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்த திரை உலகங்களுக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொட்டும் மழை-பனியில்
புனித் ராஜ்குமார் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தன. அமெரிக்காவில் இருந்து புனித் ராஜ்குமாரின் மகள் வந்து தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் ரசிகர்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணிவரை புனித் ராஜ்குமார் உடலுக்கு அவரது ரசிகர்கள் கொட்டும் மழை, கடுமையான பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் இறுதி மரியாதை
இன்று அதிகாலை 4.30 மணிக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித் ராஜ்குமாரின் இறுதி யாத்திரை தொடங்கியது. இந்த மைதானத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்டீரவா ஸ்டிடுயோவுக்கு புனித் ராஜ்குமார் உடல் கொண்டுவரப்பட்டது.
|
கன்டீரவா ஸ்டுடியோவில் நல்லடக்கம்
கன்டீரவா ஸ்டுடியோவில் புனித் ராஜ்குமாரின் பெற்றோர்களான ராஜ்குமார்- பர்வதம் அம்மாள் கல்லறைகள் உள்ளன. அதன் அருகில்தான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று முதல் செய்யப்பட்டு வந்தன. புனித் ராஜ்குமார் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தும் விதமாக முதலில் 21 குண்டுகள் முழங்கப்பட்டன. இதன்பின்னர் 2 நிமிடங்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமார் இறுதி நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் பங்கேற்றனர். இதனையடுத்து புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications