குப்பை பையில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.25 கோடி அமெரிக்க டாலர்.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் குப்பை பைகளில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.25 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் சிக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குப்பையில் கிடந்த பை ஒன்றில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை தொட்டிகளில் இருந்து காலி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் நபரின் கைக்கு இந்த டாலர் சிக்கியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பெரு நகரங்களில் குப்பை தொட்டிகள் போன்றவற்றில் காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் கிடந்தால் அதை எடுத்து விற்பனை செய்யும் நபர்களை பார்க்க முடியும். அவ்வப்போது, குப்பை தொட்டிகளில் மதிப்பு மிக்க சில பொருட்கள், ஆவணங்கள் சில நேரம் கிடைத்தாகவும் செய்திகள் அவ்வப்போது வெளியாவதை கேள்வி பட்டு இருக்கலாம்.
அந்த வகையில், தான் பெங்களூரில் குப்பை பையில் இருந்து இந்திய மதிப்பில் ரூ.25 கோடி மதிப்பு கொண்ட அமெரிக்க டாலர்கள் சிக்கியுள்ளது. சல்மான் ஷேக் என்பவர் வழக்கம் போல குப்பைகளில் ஏதேனும் தனக்கு தேவையான பொருட்கள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த குப்பை ஒன்றை பார்த்து அதில் என்ன இருக்கிறது என தேடிப்பார்த்துள்ளார்.
உள்ளே பணக்கட்டுகள் போல இருக்கிறதே என்று வேகமாக பார்த்த போது 23 பண்டலாக அமெரிக்க டாலர் இருந்துள்ளது. கடந்த 1 ஆம் தேதியே அமெரிக்க டாலர்கள் கிடைத்த போதும் அதை யாருக்கும் வெளியில் சொல்லாமல் தன்னிடமே ஷேக் வைத்து இருந்து இருக்கிறார். பிறகு நான்கு நாட்கள் கழித்து தனது ஓனர் பப்பா என்பவரிடம் இந்த அமெரிக்க டாலர்களை கொண்டு போய் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பப்பா என்பவர் தனக்கு தெரிந்த காவல் ஆணையரிடம் குப்பை தொட்டியில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் சிக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, பெங்களூர் போலீஸ் ஆணையர் பி தயானந்தா, அமெரிக்க டாலர்களுடன் தன்னை வந்து சந்திக்குமாறு பப்பாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளார். குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்களை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.
இதில் டாலர்களில் ரசாயனம் தடவி உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிளாக் மார்க்கெட் கும்பலிடம் இருந்த டாலராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அமெரிக்க டாலர்களுடன் இந்த பையை கொண்டு குப்பை போல வீதியில் வீசி சென்றது யார்... என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க டாலர் உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications