சிசிடிவியில் என்ன இருந்தது? பெங்களூர் ராமேசுவரம் கபே நிர்வாக இயக்குனர் திவ்யா திடுக்கிடும் தகவல்
பெங்களூர் : பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோவில் பார்த்த ராமேசுவரம் கபே நிர்வாக இயக்குனர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். கைகழுவும் பகுதியில் என்ன நடந்தது என்பதை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூர் நகரில் மிகவும் பிரபலமான உணவமாக 'ராமேஸ்வரம் கபே' கடை திகழ்கிறது. திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை இணைத்து 'ராமேஸ்வரம் கபே' என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூர் குந்தலஹள்ளியில் உள்ள புரூக்பீல்டிலும் ராமேசுவரம் கபே ஓட்டல் இயங்கி வருகிறது.. அந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். சரியாக மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது.
இதனால் ஓட்டல் மொத்தமும் புகை மண்டலமாக மாறியது. ஓட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சேதமாகியது. ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறி அடித்து வெளியே ஓடிவிட்டார்கள்.
சிலிண்டர் வெடித்ததாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெடித்து குண்டு என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
ராமேஸ்வரம் கபே ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா விளக்கம்: இந்நிலையில் ராமேஸ்வரம் கபே ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா குண்டுவெடிப்பின் போது நடந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " எங்கள் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு காட்சிகளை சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோ மூலம் பார்த்தேன்.
அந்த வீடியோவில் பார்த்த போது, வெறும் 10 வினாடிகளில் 2 குண்டுகள் வெடித்தது. ஓட்டலின் கை கழுவும் பகுதியில் இந்த குண்டுகள் வெடித்திருக்கிறது. எங்கள் ஓட்டலில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. அவைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒரு ஊழியரின் அடையாள அட்டை இருந்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பேட்டரிகள், போல்டு ஆகியவை சிதறி கிடந்துள்ளது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை எங்களுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டோம். இதற்கு முன்பும் ராஜாஜிநகரில் உள்ள எங்கள் ஓட்டலில் 2 முறை பைகள் கேட்பாரற்று கிடந்திருக்கினற்ன. அதனை எடுத்து நாங்கள் காவல்துறையில் ஒப்படைத்தோம். அதனை போலீசார் ஆய்வு செய்தபோது, வெடிபொருட்கள் எதுவும் இல்லை. வேறு பொருட்கள் இருப்பதாக கூறினார்கள். இதனால் இந்த முறை நாங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொண்டோம். தற்போது எங்கள் ஓட்டலுக்கு வாடிக்கையாளர் போல் ஒருவர் வந்திருக்கிறார். அப்படி வந்த ஒருவர் தான் கொண்டு வந்த பையை கைகழுவும் இடத்தில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அடுத்த நொடியிலேயே அந்த பையில் இருந்த குண்டுகள் வெடித்திருக்கிறது..
ஆனால் எங்கள் ஓட்டலுக்கு அந்த குண்டுகள் இருந்த பையை எடுத்து வந்த நேரம், சென்ற நேரம் பற்றி சரியாக எங்களுக்கு தெரியவில்லை. ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசாரிடம் நாங்கள் ஒப்படைத்துள்ளோம். ஓட்டலில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பில் எங்கள் கடையின் 3 ஊழியர்களும், பொதுமக்களும் காயம் அடைந்திருக்கிறார்கள். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் நிச்சயம் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.. தற்போதும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறாம்" என்று திவ்யா கூறினார்.












Click it and Unblock the Notifications