நம்ம ஊருக்கு வந்த பெங்களூரு கேப்டன்.. டூ ப்ளஸிஸ்-க்கு கொடுத்த வரவேற்பு.. ஆர்சிபியின் அட்டகாச ட்வீட்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்சிபி கேப்டன் டூ ப்ளஸிஸ் இந்தியா வந்துள்ளார்.
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணி கேப்டன் டூ ப்ளஸிஸ் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை , நம்ம ஊருக்கு வந்த ஆர்சிபி கேப்டன் என்று ஆர்சிபி நிர்வாகம் வரவேற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட் தொடர் என்பதை விடவும் திருவிழா என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு மாலை நேரம் வந்தாலே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அமர்ந்துவிடுவார்கள்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ளது. ஏற்கனவே அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச வீரர்கள் அணிகளுடன் இணைய தொடங்கியுள்ளனர்.

பெங்களூரு வந்த டூ ப்ளஸிஸ்
அந்த வகையில் பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் ஆர்பிசி அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை , நம்ம ஊருக்கு வந்த ஆர்சிபி கேப்டன் என்று ஆர்சிபி நிர்வாகம் வரவேற்றுள்ளது. ஆர்சிபி அணி நீண்ட நாட்களுக்கு பின் பெங்களூரு மண்ணில் விளையாட உள்ளதால், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மைதானத்தை பொறுத்தவரை, அளவில் சிறிதாக இருப்பதால் வழக்கமாக அதிக சிக்சர்கள் அடிக்கப்படும்.

ஆர்சிபி கேப்டன் டூ ப்ளஸிஸ்
அதனால் பெங்களூரு மைதானத்தில் நடக்கும் போட்டி என்றாலே, அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான போட்டியாக இருக்கும். அந்த வகையில் இமாலய சிக்சர்களை மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் விளாசும் டூ ப்ளஸிஸ் பெங்களூரு மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு தலைமையேற்ற டூ ப்ளஸிஸ், அணியை ப்ளே ஆஃப் சுற்று வரை அழைத்து சென்றார். அதுமட்டுமல்லாமல் கேப்டனாக முன்நின்று பல்வேறு போட்டிகளையும் வென்று கொடுத்தார்.

கேப்டனாக அசத்தல்
இதனைத் தொடர்ந்து டூ ப்ளஸிஸ் தேசிய அணியில் சேர்க்கப்படவில்லை என்றாலும், உலகம் முழுவதும் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அந்த வகையில் அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில், ஜெஎஸ்கே அணியை கேப்டனாக அரையிறுதி வரை அழைத்து சென்றார். இதனால் நடப்பாண்டில் ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 26ல் கூடும் வீரர்கள்
அதுமட்டுமல்லாமல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி, முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சோகத்தில் இருப்பதால், மும்பை அணிக்கு எதிராக நடக்கும் முதல் லீக் போட்டியிலேயே தங்களது ஆதிக்கத்தை செலுத்த ஆர்சிபி அணி காத்திருக்கிறது. அதேபோல் ஆர்சிபி வீரர்கள் அனைவரும் வரும் 26ஆம் தேதிக்குள் பயிற்சிக்கு வர உள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போலவே ஆர்சிபி ஓய்வறை சீக்ரெட்ஸ், வீரர்களின் கொண்டாட்டம், மகிழ்ச்சி குறித்த வீடியோக்களும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications