தொடரும் பதற்றம்.. காவிரிக்காக உயிரை கொடுக்கவும் ரெடி.. நடிகர் ராகவேந்திர ராஜ்குமார் பரபர பேச்சு
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் பெங்களூரில் நகரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் காவிரிக்காக உயிரையும் கூட கொடுக்க தயாராக இருப்பதாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான ராகவேந்திர ராஜ்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்புகளின் அடிப்படையில் காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா நீர் திறந்து விட வேண்டும்.

இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும். இந்நிலையில் தான் தமிழ்நாட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும்.
இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கேஆர்எஸ் அணை அமைந்து இருக்கும் மண்டியா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெங்களூரில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. வரும் 26ம் தேதி பெங்களூரில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று கர்நாடகா பிலிம் சேம்பருக்கான தேர்தல் நடந்தது. இதில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான நடிகரும், தயாரிப்பாளருமான ராகவேந்திரா ராஜ்குமார் ஓட்டளிக்க வந்தார். இந்த வேளையில் அவரிடம் காவிரி விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பத்திரிகையாளர் ஒருவர், ‛‛காவிரியில் நமக்கே தண்ணீர் இல்லை. இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மண்டியாவில் நேற்று பந்த் நடந்தது. பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?'' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ராகவேந்திரா ராஜ்குமார், ‛‛என் தந்தை(ராஜ்குமார்) இருந்தபோது நம்மிடம் ஒரு சக்தி இருந்தது. இப்போது அந்த சக்தி இல்லை. இதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியாது. நம் மக்களுக்கும், நம் நிலம், மொழி, நீருக்கும் பிரச்சனை இருந்தால் எங்களின் குடும்பமும், சினிமாத்துறையும் வந்து நிற்கும். தற்போது சேம்பர் தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு புதிய நிர்வாகிகள் வருவார்கள். இதையடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி அந்த குழு முடிவு செய்யும். அப்போது அவர்கள் சொல்வதை கேட்டு நாங்கள் செயல்படுவோம்.
மேலும் இந்த விஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஏதாவது கூற வேண்டும் என்றால் காவிரி என்பது உயிர் வாழ்வதற்கான பிரச்சனை. நான் கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு(உடல்நலக்குறைவு) வாழ்கிறேன். ஒருவேளை என் உயிர் மூலம் காவிரிக்கு நல்லது நடக்கும் என்றாலும் நான் அதனை கொடுத்துவிட்டு செல்ல தயாராக இருக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து. நான் அதிருப்தியில் கூறவில்லை. ஏனென்றால் சும்மா போகும் உயிர் தண்ணீருக்காக போகட்டுமே என்பதால் இதை கூறுகிறேன். ஏனென்றால் அந்த அளவுக்கும் நானும், என் குடும்பமும் அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications