ஜோதிடர் சொன்னது அப்படியே நடக்குதே.. கர்நாடகா முதல்வராகும் டிகே சிவக்குமார்? வாய்விட்ட பிரபலம்
பெங்களூர்: சிறைக்கு சென்று வந்த பிறகு டிகே சிவக்குமார் கர்நாடகா முதல்வராக வருவார் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடர் கூறினார். டிகே சிவக்குமார் சிறைக்கு சென்று திரும்பி உள்ளார். இதனால் அவர் நிச்சயம் அடுத்த கர்நாடகா முதல்வராக வருவார் என்று காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ எஸ்டி சோமசேகர் கூறியுள்ளார். அதோடு ஜோதிடர் என்ன கூறினார் என்பது பற்றியும் விளக்கி உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். டிகே சிவக்குமார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்.

கடந்த 2023ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற டிகே சிவக்குமார் முக்கிய காரணம். காங்கிரஸ் தலைவராக அவர் ஜேடிஎஸ் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒக்கலிகர் வாக்குகளை ‛கை' சின்னத்துக்கு கிடைக்க செய்தார்.
இதனால் தான் முதல்வர் தேர்வின்போது டிகே சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் டிகே சிவக்குமார் மீது சொத்து குவிப்பு, அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அவரை சமாதானம் செய்து சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு என்பது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் நிச்சயம் வருவார். இதனை 25 ஆண்டுகளுக்கு முன்பே ஜோதிடர் சரியாக கணித்து கூறியதாக பெங்களூர் யஷ்வந்தபுரா தொகுதி பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்டி சோமசேகர் கூறியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். சித்தராமையா, டிகே சிவக்குமாருடன் நெருக்கமாக இருந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து அமைச்சரானார். தற்போது அவர் பாஜகவில் அதிருப்தியில் உள்ள நிலையில் டிகே சிவக்குமாரின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் பற்றிய தகவலை அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி சோமசேகர், ‛‛ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடர் துவாரகாந்த் டிகே சிவக்குமாரின் அரசியல் எதிர்காலத்தை கணித்தார். டிகே சிவக்குமார் சிறைவாசத்துக்கு பிறகு முதல்வராவார் என்று கூறியிருந்தார். இதில் முதல் பகுதி நடந்துவிட்டது. இதனால் 2வது பகுதியும் அப்படியே நடக்கும். கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்பார். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்’’ என்று கூறினார்.
அதாவது டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை கடந்த 2019ம் ஆண்டில் கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டிகே சிவக்குமாரை டெல்லியில் வைத்து 4 நாட்கள் விசாரித்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து அரசியல் செய்து வருகிறார். இதன்மூலம் ஜோதிடர் கூறியபடி டிகே சிவக்குமார் சிறை சென்று வந்துவிட்டார். விரைவில் கர்நாடகா முதல்வராவார் என்று எஸ்டி சோமசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டிகே சிவக்குமார் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறிய சோமசேகர் விரைவில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சோமசேகர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அதோடு பெங்களூர் யஷ்வந்தபுரா தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர். அவர் அந்த தொகுதியில் தோற்கடிக்க முடியாத தலைவராக வலம் வருகிறார். 2013, 2018ல் காங்கிரஸ் சார்பிலும், 2019, 2023ல் பாஜக சார்பிலும் போட்டியிட்டு யஷ்வந்தபுரா தொகுதியில் தொடர்ந்து 4 முறை சோமசேகர் வெற்றி பெற்றுள்ளார். அதோடு சோமசேகர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். டிகே சிவக்குமாரும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications