கொஞ்சம் விஷம் தாங்க.. பெங்களூர் சிறையில் இருந்து நீதிபதியிடம் கதறிய நடிகர் தர்ஷன் - பரபரப்பு
பெங்களூர்: ரசிகர் ரேணுகா சுவாமியை கொன்ற வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடிகர் தர்ஷன் ஆஜரானார். அப்போது அவர், ‛‛நான் சூரியனை பார்த்து ஒரு மாதம் ஆகிறது. எனக்கு வாழ பிடிக்கவில்லை. கொஞ்சம் விஷம் தாருங்கள்.. செத்துப்போகிறேன்'' என கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தர்ஷன். இவருக்கு மாநிலம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் ரேணுகா சுவாமியை கொன்ற வழக்கில் தர்ஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தர்ஷனுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு அவரது ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தர்ஷனுக்கு சிறையில் எந்த சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தர்ஷன் சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் செய்யப்பட்டன. தனக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும். கூடுதலாக தலையணை மற்றும் பெட்ஷீட் தர வேண்டும் என ஒரு மனுவும், பெங்களூர் சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு தன்னை மாற்ற வேண்டும் என இன்னொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தர்ஷன் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆஜரானார்.
இந்த வேளையில் தர்ஷன், ‛‛நான் சூரியனை பார்த்து 30 நாட்கள் ஆகிறது. என் கைகளில் பூஞ்சை தாக்குதல் உள்ளது. என்னால் வாழ முடியவில்லை. கொஞ்சம் விஷம் தாருங்கள். குடித்து விட்டு இறந்து விடுகிறேன். விஷம் தர உத்தரவு போடுங்கள்'' என்று கதறினார். அவரது இந்த கோரிக்கையை கேட்டு நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.
நீதிபதி கூறும்போது, ‛‛நீங்கள் இப்படி என்னிடம் கேட்க கூடாது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சிறை கண்காணிப்பாளரிடம் கூறுகிறேன்'' என்று கூறியதோடு விசாரணையை மதியம் 3 மணிக்கு ஒத்திவைத்தார். இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications