விற்பனைக்கு வரும் ஆர்சிபி! அப்போ கோலி இனி ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டாரா? வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான மற்றும் வெற்றிகரமான ஒரு அணியாக ஆர்சிபி இருக்கிறது. உலகெங்கும் ஆர்சிபி அணிக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதற்கிடையே ஆர்சிபி அணி விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணியை மொத்தமாக விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டு வருவதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிக முக்கிய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இருக்கிறது. முதலாவது ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பங்கேற்று வந்தாலும் கோப்பையை வெல்லாமல் இருந்த வந்தது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தாண்டு தான் ஐபிஎல் தொடரை பெங்களூர் அணி வென்றிருந்தது.

ஆர்சிபி அணி விற்பனை
இதற்கிடையே ஆர்சிபி அணி விற்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவின. இந்தச் சூழலில் தான் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் அதை விற்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் கவனத்தை ஈர்த்துள்ளது.
லலித் மோடி
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "ஐபிஎல் அணி ஒன்று விற்கப்பட இருப்பதாகக் கடந்த சில காலமாகவே தகவல் பரவி வருகிறது.. குறிப்பாக ஆர்சிபி விற்பனை செய்யப்படலாம் என்கிறார்கள். இதற்கு முன்பு இந்த ஆஃபர் வந்த போது உரிமையாளர்கள் மறுத்திருந்தனர். ஆனால், இப்போது உரிமையாளர்கள் அதை விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆர்சிபி கடந்தாண்டு தான் ஐபிஎல் கோப்பையை வென்றது, வலிமையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.. சிறந்த அணி மற்றும் நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது. இப்படிப் பக்கா செட்-அப் உடன் ஒரே அணியாக இருக்கிறது.
சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இதைவிடச் சிறந்த முதலீடு எதுவும் இருக்க முடியாது. இதை யார் வாங்கினாலும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இது நிச்சயமாக ஒரு புதிய சாதனையைப் படைக்கும். ஐபிஎல் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு லீக் மட்டுமல்ல, மிகவும் மதிப்புமிக்கதும் என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளியான தகவல்
இப்போது ஆர்சிபி அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் மூலம் டியாகோ பிஎல்சி என்ற நிறுவனம் வைத்திருக்கிறது. ஆர்சிபி விற்றுவிட்டு, முழுமையாக அணியில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசகர்களுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை டியாகோ நிறுவனம் தொடங்கியுள்ளதாகக் கடந்த ஜூன் மாதமே தகவல்கள் வெளியாகியிருந்தது.
கடந்த மாதம் லலித் மோடி, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் ஒரு பாட்காஸ்டில் கலந்து கொண்டார். அதிலும் கூட அவர் ஆர்சிபி குறித்துப் பேசியிருந்தார். அதில் அவர், "$2 பில்லியனுக்கும் குறைவான தொகைக்கு ஆர்சிபி அணியை விற்பது புத்திசாலித்தனம் அல்ல. அடுத்த ஆண்டு விற்பனை நடந்தால், அதன் மதிப்பு $2.5 பில்லியனை எட்டக்கூடும்" என்றார்.
கோலி விளையாடுவாரா?
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும் அவர் தான் ஆர்சிபி முகமாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பல கோடி பாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் ஆர்சிபி அணிக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் எந்தவொரு மார்கெட்டிங் செய்ய மிகச் சிறந்த அணியாக ஆர்சிபி இருக்கிறது. இதுவே ஆர்சிபி வேல்யூ அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
அதேநேரம் ஆர்சிபி அணி விற்கப்பட்டாலும், கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது. அணி நிர்வாகம் மட்டும் தான் மாறுமே தவிர அணி செட்அப் மாறாது என்பதால் அவர் தொடர்ந்து விளையாடுவார்.












Click it and Unblock the Notifications