ஆங்கிலேயர் ஏஜெண்ட் RSS; பாகிஸ்தான் ஏஜெண்ட் காங்கிரஸ்- கர்நாடகா சட்டசபையில் பெரும் களேபரம்- அமளி!
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆங்கிலேயர்களின் ஏஜெண்ட் என முதல்வர் சித்தராமையா விமர்சித்தார்; இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சிதான் பாகிஸ்தானின் ஏஜெண்ட் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்ததால் பெரும் அமளி ஏற்பட்டது.
கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் சித்தராமையா, ஆந்திரா மாநிலம்தான் தலித்- பழங்குடிகளுக்கு மக்கள் தொகைக்கேற்ப நிதி உதவி வழங்குவதை நடைமுறைப்படுத்தியது. ஆந்திராவைத் தொடர்ந்து கர்நாடகா இதனை செயல்படுத்தியது; பாஜா ஆட்சி செய்யும் மாநிலங்களில் இத்தகைய நிதி ஒதுக்கீடு கிடையாது என்றார்.

இதற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்தான்; அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்ததும் காங்கிரஸ்தான் என பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். ஆனால் கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே எழுந்து, அம்பேத்கரை தோற்கடித்ததே ஆர்.எஸ்.எஸ். வீர சாவர்க்கர்தான் என்றார். மேலும் தமது தேர்தல் தோல்வி தொடர்பாக அம்பேத்கர் எழுதிய குறிப்புகளை பகிரங்கமாக வெளியிட தயாராக இருக்கிறேன் என்றும் பிரியங் கார்கே சவால் விட்டார். அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் முழக்கங்களை எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் சித்தராமையா, நாடு விடுதலையின் போது ஆங்கிலேயர்களின் ஏஜெண்டாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்; அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உத்தரவுப்படி நடப்பதுதான் பாஜக என்றார். இதற்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். மேலும், காங்கிரஸ் கட்சிதான் பாகிஸ்தானின் ஏஜெண்ட்டாக செயல்பட்டு நாட்டையே கூறு போட்டது எனவும் பாஜக எம்.எல்.ஏக்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் கர்நாடகா சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் யுடி காதர், அண்ணல் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக வரும் 21-ந் தேதிக்குப் பின்னர் சட்டசபையில் விவாதிக்கலாம்; அதற்கு நேரம் ஒதுக்கப்படும்; தற்போது அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை காங்கிரஸ், பாஜக-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதன் பின்னரும் சில பாஜக எம்.எல்.ஏக்கள் சபை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டே இருந்ததால் கோபமடைந்த சபாநாயகர் காதர், அமைதியாக உட்கார வேண்டும்.. இல்லாவிட்டால் சபையில் இருந்து தூக்கி எறிவேன் என எச்சரித்தார்.இதற்கும், எங்களை தூக்கி எறிவேன் என எப்படி சொல்லலாம்? என பாஜக எம்.எல்.ஏக்கள் மல்லுக்கட்டினர். இதன் பின்னர் தூக்கி எறிவேன் என்ற வார்த்தையை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் யுடி காதர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications