சசிகலா சென்னைக்கு வருவது எப்போது.. டிடிவி தினகரன் சொன்ன சூப்பர் தகவல். குஷியில் தொண்டர்கள்
பெங்களூரு: இன்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ள நிலையில், பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார், அதன்பிறகே அவர் சென்னைக்கு வருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் விடுதலை செய்யப்பட்டு சசிகலா, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக பெற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணம் அடைந்த காரணத்தால் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா சிகிச்சை
கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால், ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் பெங்களூருவில் தங்க முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
சென்னை வருகிறார்
இதுபற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார். அதன்பிறகு சென்னைக்கு அவர் புறப்பட்டு வருகிறார் என்றார்.
அமமுகவினர் உற்சாகம்
சசிகலா சென்னை வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சசிகலா வருகை குறித்து டிடிவி தினகரன் சொன்ன தகவலால் அமமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி அவரது அரசியல் அதிரடியாக இருக்கும் என்று அமமுகவினர் நம்புகிறார்கள்.
போயஸ் கார்டனில்
சசிகலா அடுத்த வாரம் சென்னை வந்ததும் நேராக ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்று தெரிகிறது. அங்கு அஞ்சலி செலுத்துகிறார். போயஸ் கார்டன் பகுதியில் தயாராகி வருவதாக சொல்லப்படும் பங்களாவில் சசிகலா தங்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சசிகலா சென்னை வருகைஅடுத்த வாரம் என்பது உறுதியாகி உள்ளதால் தமிழக அரசியல களம் சூடுபிடித்துள்ளது.