யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர்
பெங்களூருவில் குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம் என்று நம்பி வந்த மனைவியை, அவரது இரு பிஞ்சு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே கணவன் கத்தியால் குத்திக் கொன்ற நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாதேவபுரா பகுதியில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலில், ஹோம் கார்டாகப் பணியாற்றி வந்த மஞ்சுளா (32) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் பிரதீப் செய்த இந்த கொடூரச் செயல், ஞாயிற்றுக்கிழமை மாலை பி. நாராயணபுராவில் உள்ள மஞ்சுளாவின் பெற்றோர் இல்லத்தில் அரங்கேறியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், பிரதீப் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, பெரும் கடனாளியாக மாறியதும், இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகளுமே இந்த துயரத்திற்கு பின்னால் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கொலை செய்வதற்கு முன்பாக, ஆன்லைன் பந்தயப் பழக்கத்தால் தனது குடும்பமே சீரழிந்துவிட்டதாகக் கூறி அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
தொடர் குடும்பத் துன்புறுத்தல் மற்றும் கணவனின் சந்தேகப் புத்தியால் மனமுடைந்த மஞ்சுளா, தனது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, கடந்த சில காலமாகத் தன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மஞ்சுளாவின் நடத்தை மீது பிரதீப் தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, குழந்தைகளைப் பற்றியும் அவதூறாகப் பேசி மன ரீதியான சித்திரவதைகளை அளித்து வந்ததால், வேறு வழியின்றி அவர் பிரிந்து வாழும் முடிவை எடுத்ததாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதாகவும், மீண்டும் இணைந்து வாழலாம் என்றும் கூறி மஞ்சுளாவின் வீட்டிற்கு பிரதீப் வந்துள்ளார். அவரும் தன் கணவன் திருந்திவிட்டான் என்ற நம்பிக்கையோடு பேசத் தொடங்கியுள்ளார். ஆனால், அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக, பிரதீப் தனது மழை அங்கிக்குள் (Rain jacket) கொடூர ஆயுதத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பிரதீப் தன் மனைவியை இழுத்துப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். பச்சிளம் குழந்தைகளின் கண் முன்னாலேயே இந்த வெறித்தனம் அரங்கேறியுள்ளது. மஞ்சுளாவின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் வரை அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். தாயைக் காப்பாற்றத் துடித்த குழந்தைகளின் அலறல் சத்தமும், குடும்பத்தினரின் கதறலும் அந்த இடத்தையே உலுக்கியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, பிரதீப்பும் தற்கொலைக்கு முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பலத்த காயமடைந்த மஞ்சுளா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மகாதேவபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிரதீப்பைக் கைது செய்தனர். மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சம்பவத்திற்கு முன் பிரதீப் வெளியிட்ட வீடியோவில், மனைவியின்றி வாழ முடியாது என்று கூறியதோடு, சமரச பேச்சுக்காக வந்ததாகவும், மறுத்தால் அவளைக் கொன்றுவிடுவேன் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டதை வெளிப்படுத்தியுள்ளார். 'என் மனைவி உண்மையில் மிகவும் நல்லவள்' என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது இந்த துயரத்தை மேலும் தீவிரமாக்குகிறது.
மேலும், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு யாரும் அடிமையாக வேண்டாம் என்று வேதனையுடன் கூறியுள்ளார். ஆன்லைன் கேமிங்கால் தனது திருமண வாழ்வு சீரழிந்து, மனைவியும் குழந்தைகளும் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதாக அவர் அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மகளின் இழப்பைத் தாங்க முடியாமல் கதறி அழுத மஞ்சுளாவின் தாய் கூறுகையில், 'நாங்கள் இறுதிச் சடங்கிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பிரதீப் மஞ்சுளாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் குளிக்கச் சென்ற சில நிமிடங்களில், என் மகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நடித்து, அவளது கால்களை இழுத்து வீழ்த்தி கொடூரமாகக் குத்தியுள்ளார். நாங்கள் ஓடி வந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் என் மகள் எங்களை விட்டுப் போய்விட்டாள் என்று மருத்துவர்கள் கூறியபோது எங்கள் உலகமே இருண்டுவிட்டது' என்று கண்ணீருடன் விவரித்தார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பிரதீப் சுமார் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கடனில் மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மஞ்சுளா பணிக்குச் சென்று தாமதமாக வீடு திரும்பும்போது, அவரது விசுவாசத்தைக் கணவர் சந்தேகித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் தன் குழந்தைகளின் அமைதியான வாழ்விற்காக மஞ்சுளா விவாகரத்து கோரி சட்டப்பூர்வமாக மனு தாக்கல் செய்திருந்த நிலையில்தான், இந்த கொடூர வன்முறைக்கு ஒரு அப்பாவிக் குடும்பத் தலைவியின் உயிர் பறிபோயுள்ளது.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications