கர்நாடக பாஜக அரசு கையிலெடுத்த மதமாற்ற தடைச் சட்டம்! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு! விடமாட்டோம் என சூளுரை
பெங்களூரு: 'மதமாற்ற எதிர்ப்பு' மசோதா குறித்து கடும் கண்டம் தெரிவித்துள்ள கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அதை எதிர்த்து சட்டமன்றத்தில் போராடுவேன் என தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்றத்தை தாங்களும் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள சித்தராமையா ஆனால் குறிப்பிட்ட மதத்தை இலக்காக கொண்டு அரசு மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்ற முயல்வதாக குற்றம்சாட்டினார்.
இதுமட்டுமின்றி கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் வெள்ள பாதிப்புகள், கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம், பிட்காயின் முறைகேடு, உள்பட அரசின் தோல்விகள் குறித்தும் பிரச்சினை எழுப்புவோம் என தெரிவித்தார்.

மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு
கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை கர்நாடகாசட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ கூலிஹட்டி சேகர், "இந்துக்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதாகவும், திருமணத்துக்காகவும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதாகவும் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பாஜக எம்எல்வுக்கு பதில் அளித்த கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, "கட்டாய மதமாற்றத்தை தடுக்க விரைவில் தனிச்சட்டம்கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

விரைவில் மசோதா பேரவையில் தாக்கல்
இதற்கிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தில் மூளைச்சலவை செய்து செய்யப்படும் மத மாற்றங்களை தடுக்கவே சட்டசபையில் மதமாற்றத் தடை மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், மசோதா குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், எந்த மதத்தையும், அவர்களின் மரபுகளையும் நடைமுறைகளையும் கண்டிப்பாக பாதிக்காது என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். மதமாற்றம் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியது அல்ல என தெரிவித்த பசவராஜ் பொம்மை, சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினர் அதில் வீழ்ந்து விடக்கூடாது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் திங்களன்று கூட உள்ள சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் கர்நாடக அமைச்சரவை புதிய மசோதாவை மறுஆய்வு செய்து, கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சட்டசபையில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை எதிர்த்துப் போராடப் போவதாக உறுதியளித்தார். ஏற்கனவே கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் இருப்பதால், மீண்டும் மசோதா தேவையில்லை என்று கூறிய சித்தராமையா ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் கர்நாடக மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு பெங்களூரு பேராயர் உட்பட பல கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இதுபோன்ற மக்கள் விரும்பாத, பாரபட்சமான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என கிறித்துவ அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த சட்டம் கர்நாடகாவில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், 'கட்டாய மத மாற்றங்களுக்கு' எதிராக சட்டம் இயற்றும் நான்காவது பாஜக ஆளும் மாநிலமாக கர்நாடகா இருக்கும். ஏற்கனவே உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் மதமாற்ற எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் வரை அபராதம்
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். ஒருவேளை திருமணம் செய்து கொள்ளும் பெண் மைனராக இருந்தால் கூடுதலாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கூடுதலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் மதமாற்றம் செய்வோருக்கு 3 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications