டிகே சிவக்குமாருக்கு நோ சான்ஸ்? 5 ஆண்டும் சித்தராமையா தான் கர்நாடகா முதல்வராமே! வாய்விட்ட அமைச்சர்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாரும் தொடர்வார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் அப்படி ஏதேனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரபரப்பாக விளக்கி உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 13ம் தேதி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றனர். மேலும் 8 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
முன்னதாக கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் மோதல் இருந்தது. இருவரும் டெல்லி சென்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்களை தொடர்ந்து சந்தித்து பேசினர். மேலும் இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்காமல் இருந்தனர். இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டது.
இறுதியில் சோனியா காந்தி தலையிட்டு பேசியதில் துணை முதல்வர் பதவியை ஏற்பதாக டிகே சிவக்குமார் ஒப்புக்கொண்டார். இதனால் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே தான் ஒரு தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதாவது கர்நாடகா முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் தொடர்வார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் தான் டிகே சிவக்குமார் தற்போது துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் பரவின.
இதுபற்றி இதுவரை காங்கிரஸ் கட்சியினர் எதுவும் கூறவில்லை. இதனால் கர்நாடகா முதல்வராக சித்தராமையா 5 ஆண்டுகள் தொடர்வாரா? இல்லாவிட்டால் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் தலா இரண்டரை ஆண்டுகள் என முதல்வர் பதவியை பிரித்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற எம்பி பாட்டீலில் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளது. ‛‛சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார். முதல் இரண்டரை ஆண்டு ஒருவர், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர் முதல்வராக இருப்பார் என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவிப்பார்'' என்றார்.
இந்த கருத்தை தெரிவித்துள்ள எம்பி பாட்டீல் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் கடந்த 2013-2018 ல் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் எம்பி பாட்டீலின் இந்த கருத்து தற்போது கர்நாடகா அரசியலில் விவாதத்தை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications