டெல்லியில் அதிரடி திருப்பம்.. டிகே சிவக்குமார் பிடிவாதம்! சித்தராமையாவை சிஎம் என அறிவிப்பதில் இழுபறி
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூரில் பதவியேற்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தான் டிகே சிவக்குமார் பிடிவாதம் பிடிப்பதால் சித்தராமையாவை முதல்வராக அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருவதோடு, முதல்வர் பதவிக்கான ரேஸில் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரும் அடிபடுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை பெற ராகுல் காந்தி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் காய்நகர்த்தி வந்தனர். இருவரும் டெல்லியில் முகாமிட்டு நேற்று மல்லிகார்ஜூன கார்கேவையும், இன்று ராகுல் காந்தியையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

நேற்றைய பேச்சுவார்த்தையின்போது இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவில்லை என மல்லிகார்ஜூன கார்கேவிடம் உறுதியாக கூறினார். இதையடுத்து இன்று 2வது கட்டமாக பேச்சுவார்த்தை தொடர்ந்தது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோரிடம் ராகுல் காந்தியே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இருவரும் தங்களுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கூறினர். இருப்பினும் ராகுல் காந்தி கட்சி மற்றும் ஆட்சியின் நலன் சார்ந்த விஷயங்களை இருவரிடமும் எடுத்து கூறினார். இந்நிலையில் தான் சித்தராமையா கர்நாடகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தியை, சித்தராமையா சந்தித்து பேசியபோது இதனை அவரே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு ‛‛ஆல் தி பெஸ்ட்'' எனக்கூறியதாக கூறப்படுகிறது.
அதேபோல் ராகுல் காந்தி, டிகே சிவக்குமாரை சமாதானம் படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவியோடு 2 முக்கிய துறைகளை வழங்குவதாகவும் கட்சி மேலிடம் கூறியுள்ளதோடு, வரும் நாட்களில் முதல்வர் பதவி நிச்சயம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அவரை சமாதானம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தான் பெங்களூரில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று மாலையில் கர்நாடகா ஆளுநரை சித்தராமையா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையில் நாளை பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் நாளைய பதவியேற்பு விழாவில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாகவும், அதன்பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி என்ற தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பெரிய ட்விட்ஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது சித்தராமையாவை முதல்வராக்க டிகே சிவக்குமார் விரும்பவில்லை. மாறாக தனக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவர் மேலிட தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் தனக்கு முதல்வர் பதவி வழங்காவிட்டால் சித்தராமையாவுக்கும் அந்த பதவியை வழங்காமல் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்க வேண்டும் என டிகே சிவக்குமார் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் சித்தராமையாவை முதல்வராக்க அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே தான் கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛கர்நாடகா முதல்வராக சித்தராமையாவின் பெயரை இறுதி செய்யவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவை மல்லிகார்ஜூன கார்கே எடுப்பார்'' என்றார். இதன்மூலம் கர்நாடகா அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த முதல்வர் யார்? என்பதில் தொடர்ந்து ட்விஸ்ட் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications