கொரோனா பேரலையிலிருந்து.. மீண்டு வரும் பெங்களூர்.. சில மண்டலங்கள் மட்டும் இன்னும் பயமுறுத்துதே ஏன்?
பெங்களூர்: பெங்களூர் நகரில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை அதே புள்ளிவிவரம் காட்டுகிறது.
இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கடந்த மாதம், பெங்களூர் நகரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கு பாதி பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. அதாவது பாசிடிவ் ரேட் 50 சதவீதம் என்ற அளவுக்கு மேலே இருந்தது.
பெரிய பாதிப்பை சந்தித்த நகரம்
அதனால்தான் நகரில் மருத்துவமனைகளில் படுக்கை கூட இல்லாத நிலைமை உருவாகி பெரும் பாதிப்பு உருவானது. இதற்கிடையே லாக் டவுன் காரணமாக தற்போது நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது. ஒட்டுமொத்தமாக பெங்களூரில் இப்போது பாசிட்டிவ் ரேட் 5 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 5 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.
பொம்மனஹள்ளி மண்டலம்
அதேநேரம், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் பெங்களூர் கிழக்கு ஆகிய மண்டலங்களில் 6 சதவீதத்துக்கு மேலே பாசிட்டிவ் ரேட் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. கவலைப்படும் அம்சமாகவும் இருக்கிறது. அதே நேரம் இந்த மண்டலங்களில் பரிசோதனை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் மருத்துவத்துறை பயனர்கள்.
பரிசோதனை அதிகம் பாஸ்
பொம்மனஹள்ளி மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கும், பெங்களூர் கிழக்கு மண்டலத்தில் அதைவிட பாதிப்பு குறைவாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். பரிசோதனை அளவில் உள்ள வித்தியாசம்தான். உதாரணத்திற்கு, பெங்களூர் கிழக்கு மண்டலம் மொத்தம் 44 வார்டுகளை கொண்டது. 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கு தினசரி சராசரியாக 173 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
தனித்துவமான பொம்மனஹள்ளி
பொம்மனஹள்ளி மண்டலம், 125 சதுர கிலோ மீட்டர் கொண்டது. ஆனால், தினசரி 747 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் இங்கே பாசிட்டிவ் ரேட் என்பது 6.2 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. பொம்மனஹள்ளி மண்டலத்தில் சிறப்பு அதிகாரி ராஜேந்தர் கட்டாரியா இதுபற்றி கூறுகையில், இந்த மண்டலம் தனித்துவம் கொண்டது. வெவ்வேறு வகையான குடியிருப்புகளை கொண்ட மண்டலம். எனவேதான் இங்கே நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பகுதிகளும் இதற்குள் வருகிறது. குடிசைப்பகுதிகளும் உள்ளன. உயர்ந்த கட்டிடங்களும் இதே மண்டலத்திற்குள் உள்ளது. இப்படியான வேறுபட்ட தன்மைகளால் நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக குடிசை பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதே நேரம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இங்கு பாசிட்டிவ் ரேட் 34 முதல் 35 சதவீதம் வரை இருந்தது. அதை ஒப்பிட்டால் இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்று, தெரிவிக்கிறார்.
மோசமான காலம் முடிந்து விட்டது
பெங்களூர் சுகாதார அதிகாரி டாக்டர் சிவகுமார் கூறுகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாங்கள் 100 பேரை பரிசோதித்தால், 40 பேருக்கு பாசிட்டிவ் இருந்தது. இன்று, இது 2 அல்லது 3 மட்டுமே. மோசமான நிலை முடிந்துவிட்டது, என்றார்.