சசிகலா அப்போலோவுக்கு வந்ததால் பதறியடித்து ஓடிவந்தார் இ.பி.எஸ்... விவரிக்கும் பெங்களூரு புகழேந்தி..!
பெங்களூரு: சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடும் அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறுகிறார் அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.
Recommended Video
அதிமுக அவைத்தலைவர் மதுசூதணனை பார்க்க சசிகலா அப்போலோ வருகிறார் என்ற தகவலை அறிந்த பின்னர், அவரை முந்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இ.பி.எஸ். அங்கு வந்ததாக விவரிக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

அப்போலோ விசிட்
''அதிமுக அவைத்தலைவர் மதுசூதணனை பார்க்க, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிய சசிகலா அப்போலா மருத்துவமனை சென்றதை நல்ல முடிவாக நான் பார்க்கிறேன். சசிகலா அப்போலோ செல்கிறார் என்ற தகவல் அவர் அங்கு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே எனக்குத் தெரியும். இதனிடையே எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுசூதணனை மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் திட்டத்திலேயே இ.பி.எஸ். இல்லை. திடீரென சசிகலா அங்கு செல்கிறார் என்றவுடன் அவரை முந்திக்கொண்டு பார்த்துவிட வேண்டும் என இவரும் அங்கு சென்றார்.''

மீண்டும் முதல்வர்
''சசிகலாவிடம் சமாதானமாக போயிருந்தால் இ.பி.எஸ். தான் இன்று மீண்டும் முதலமைச்சராக இருந்திருப்பார். அவருக்கு தவறான வழிகாட்டுதலை கொடுத்து சிலர் கெடுத்துவிட்டார்கள். உங்கள் வாயிலாக ஒன்றை கூறுகிறேன், மறைந்த அம்மாவே மீண்டும் உயிருடன் வந்தால் கூட நீங்க யாரும்மா என்று கேட்கும் கூட்டம் இது. ஜெயக்குமார் என்பவர் எதற்கெடுத்தாலும் அது அவர்கள் கருத்து என்று கூறுகிறார், நான் கேட்கிறேன் நீங்கள் பேசும் கருத்து யார் கருத்து, உங்களுக்கு மட்டும் குற்றால அருவியில் இருந்தா கருத்துக்கொட்டுகிறது.''

சிறுபிள்ளைத்தனம்
''எடப்பாடி பழனிசாமி சொல்வதை கிளிப்பிள்ளையை போல் பேட்டியளித்துவிட்டு செல்வார் ஜெயக்குமார். காரில் கொடிகட்டக்கூடாது, படம் வைக்ககூடாது என்று சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனமான செயல். சசிகலாவின் முதல் நடவடிக்கையே அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் அறிவேன்.''

பலர் காத்திருப்பு
''அதிமுக என்பது பேசி பேசியே வளர்ந்த கட்சி. இன்று இந்தக் கட்சியிலிருந்து ஊடக விவாதங்களில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவிப்பை பார்த்து நான் அதிர்ந்து போய்விட்டேன். என்ன நடக்கிறது அதிமுகவில் என ஒவ்வொரு தொண்டனும் கவலையுற்றுள்ளான். இதில் வேதனை என்னவென்றால் ஒ.பி.எஸ். காக்கும் அமைதி தான். அவரை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய இன்று பலர் காத்திருக்கின்றனர். அவர்கள் யார் யாரெல்லாம் என்பது எனக்குத் தெரியும். கட்சி இன்று இந்தளவுக்கு சென்றதற்கு காரணம் வேலுமணி, தங்கமணி, இ.பி.எஸ்.தான்.''

கவலையில்லை
''ஒ.பி.எஸ்.சை எதிர்க்கட்சியாக கொண்டுவாருங்கள் என நான் குரல் கொடுத்தது தான் இ.பி.எஸ்.க்கு என் மீது கோபம். பரவாயில்லை அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு நான் முடங்கிவிடமாட்டேன். நான் திராவிட சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவன். எனது தந்தை தி.க.வாசு பெரியாரின் தொண்டர். இதனால் அடுத்தக்கட்டமாக நான் என்ன செய்யலாம் என்பதை ஆலோசித்து விரைவில் நல்ல முடிவாக அறிவிக்கிறேன்.''












Click it and Unblock the Notifications