பெங்களூரை வாஷ் அவுட் செய்த மழை! தலைமைச் செயலகம் உள்ளேயே வந்த வெள்ளம்!
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை தலைநகர் பெங்களூருவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 125மி.மீ மழை பதிவாகியிருந்த நிலையில் பெங்களூருவில் மட்டும் சுமார் 131மி.மீ அளவில் மழை பொழிந்துள்ளது.
இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தரைதளம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதேபோல சாலைகளிலும் வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகளில் வெள்ள நீர்
கடந்த சில நாட்களாகவே தென்னிந்தியாவில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இயற்கையிலேயே வடிகால் வசதி கொண்ட கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை இந்த மழை பதம் பார்த்துள்ளது. பெங்களூருவில் மேம்படுத்தப்படாத கட்டமைப்பு வசதிகள் கரணமாக மழை நீர் ஏறத்தாழ நகரின் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைதளங்கள் மழை நீர் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உருவானது.

சட்டமன்ற கேன்டீன்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, இந்த கனமழை காரணமாக அம்மாநில தலைமைச் செயலக கேன்டீனில் வெள்ளநீர் புகுந்துள்ள வீடியோதான் அது. இந்த நீர் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தேங்கியிருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து மாநில அரசின் கட்டமைப்பு வசதி குறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர். முன்னதாக மழை நீர் பல இடங்களில் தேங்கியிருந்த நிலையில் நேற்றிரவு பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷ்னர் நள்ளிரவில் ஆய்வு செய்திருந்தார்.

அதிருப்தி
ஆனாலும் மழை ஏற்படுத்தியுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்கெனவே இதேபோல பெய்த மழை நகரின் மத்திய பட்டு வாரியம் மற்றும் கேர்.ஆர்.புரம் வழித்தடத்திற்கு இடையேயுள்ள வெளிவட்ட சாலையை (ORR) கடுமையாக பாதித்திருந்தது. இந்த சாலையில் மழை நீர் தேங்கியதால் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சுமார் 5 மணி நேரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடிதம்
இது குறித்து இந்த வெளிவட்ட சாலையில் உள்ள நிறுவனங்கள், இந்த வெள்ளம் காரணமாக சுமார் ரூ.225 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வெளிவட்ட சாலை நிறுவனங்களின் சங்கம் (ORRCA) சார்பில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், ஆகஸ்ட் 30 அன்று பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் ஊழியர்கள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர இயலாமல் போனது. இதனால் சுமார் ரூ.225 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. எனவே அடிப்படை வசதிகளை சீரமைத்து தர வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications