பெங்களூரை தெறிக்கவிடும் ஓசூர் புதிய விமான நிலையம்.. 4 இடங்களில் ஆய்வு நடத்தும் தமிழக அரசு!
பெங்களூர்: கர்நாடகா எல்லையான ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க 4 இடங்களைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தி வருவதாக தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகமான டிட்கோ அதிகாரி மதுசூதனன் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்ற விண்வெளி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் டிட்கோ அதிகாரரி மதுசூதனன் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் என அறிவித்தது. பெங்களூருக்கு மிக அருகே உள்ள ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் கர்நாடகா அரசு அதிர்ந்தது. இதனையடுத்து ஓசூருக்குப் போட்டியாக 26 கிலோ மீட்டர் தொலைவில் ஜிகினி (ஜிகானி) என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்க முயற்சித்தது கர்நாடகா அரசு. ஆனால் ஜிகினி பகுதியில் விமான நிலையம் அமைக்க போதுமான இடம் கிடைக்காத நிலையில் இத்திட்டத்தையே கர்நாடகா அரசு கைவிட்டது.

தற்போது ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் விண்வெளி துறை மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் டிட்கோ அதிகாரி மதுசூதனன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓசூரில் விமான நிலையம் அமைக்க 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஓசூர் விமான நிலையம் அமைந்துவிட்டால் பெங்களூரில் இருந்து பல நிறுவனங்கள் ஓசூருக்கு இடம் பெயரக் கூடும். இதனால் ஓசூர் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்றார்.
மேலும் கோவை சூலூர் விமானப்படை தளம் அருகே வானவியல் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் அருகே விண்வெளி தொழில் சார்ந்த நிறுவனங்களுக்காக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றார் டிட்கோ அதிகாரி மதுசூதனன்.
தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கையை உருவாக்கி வருகிறது; இந்த விண்வெளிக் கொள்கை அடுத்த 2 மாதங்களில் வெளியிடப்படும். இதனையடுத்து தமிழ்நாட்டில் விண்வெளி தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் டிட்கோ அதிகாரி மதுசூதனன் கூறினார்.












Click it and Unblock the Notifications