தமிழக லாரியை பறிமுதல் செய்த பெங்களூர் போலீஸ்.. வேதனையில் டிரைவர் எடுத்த விபரீத முடிவு!
பெங்களூர்: கர்நாடகாவில் மது குடித்துவிட்டு லாரி ஓட்டி வந்த வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டிரைவர் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரது லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும், இதனால் மனவேதனை அடைந்த அந்த ஓட்டுநர் லாரிக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலான நபர்கள் சில எதிர்பாராத நேரங்களில் மோசமான முடிவை எடுத்துவிடுவோம். அந்த சூழலில் நாம் கூடுதலாக ஒரு நொடி யோசித்தால் தவறான முடிவை எடுக்க மாட்டோம். ஆனால், அவசரப்பட்டு நாம் எடுக்கும் முடிவு, நம்மை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையுமே பாதித்துவிடும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

சோதனை
கர்நாடக தலைநகர் தெற்கு பெங்களூரில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த ரூட்டில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் வழக்கம் போலச் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு லாரி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் 26 வயதான சண்முகம் என்றும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்..
என்ன நடந்தது
அதாவது சனிக்கிழமை இரவு 11 மணியளவில் பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டில் போக்குவரத்து போலீசார் வழக்கம் போல வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குத் தமிழக பதிவு எண் கொண்ட லாரி வந்த நிலையில், அதை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். வாகனத்தை ஓட்டி வந்த சண்முகம் மது குடித்து இருக்கிறாரா என்பதைக் கண்டறியச் சோதனை நடத்தப்பட்டது. அதில் சண்முகம் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக மது குடித்திருந்தது உறுதியானது.
தூக்கு
இதையடுத்து போலீசார் வழக்கமான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதாவது லாரி பறிமுதல் செய்யப்பட்டு, சண்முகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், இதனால் சண்முகம் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் தனது வாகனத்தைப் பறிமுதல் செய்துவிட்டனரே என்பதை நினைத்து சண்முகம் வேதனை அடைந்துள்ளார். இந்தச் சூழலில் தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பறிமுதல் செய்யப்பட்ட அதே லாரிக்குள் சண்முகம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்
சண்முகம் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் இது தொடர்பாகக் கூறுகையில், "இறந்தவரின் குடும்பத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்தப் புகாரும் பெறப்படவில்லை. ஜெ.பி. நகர் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கும்" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications