"பாதுகாப்பு வேண்டும்.." காதல் திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் மகள் போலீசில் மனு!
பெங்களூர்: காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள், தந்தையிடம் இருந்து பாதுகாப்பு போலீஸ் நிலையம் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இந்தச் சூழலில் இவரது மகள், பெங்களூரில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது

சேகர்பாபு மகள்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சேகர்பாபு. திமுக அரசு அமைந்தது முதலே அறநிலையை துறை சார்பில் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்தி வருபவர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு. இந்நிலையில், இவரது மகள் ஜெயகல்யாணி, சதீஷ்குமார் என்பவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருணம் செய்து கொண்டுள்ளார்.

போலீசில் புகார்
இந்நிலையில், இந்தத் தம்பதி நேற்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஜெயகல்யாணி தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை நேரில் சந்தித்து இருவரும் மனு கொடுத்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சதீஷ்குமாரை பல ஆண்டுகளாகக் காதலிப்பதாக ஜெயகல்யாணி தெரிவித்தார்.

கைது
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகல்யாணி, "சதீஷ் குமாரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். இருவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். எங்களின் காதலுக்கு எனது பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்து கொள்ள முயன்றோம். அப்போது எங்களை மகாராஷ்டிராவில் கண்டுபிடித்த, போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து இரண்டு மாதங்கள் சிறையில் அடைத்துவிட்டனர்.

பாதுகாப்பு தேவை
இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இதற்கு எல்லாம் காரணம் எனது தந்தை தான். நான் மெஜர் பெண் தான்! இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருணம் செய்து கொண்டோம். நான் எனது சுய விருப்பத்தின் பெயரிலேயே இவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தமிழகத்தில் இருந்து பலரும் எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications