காவிரி நதி நீர் பரபரக்கு நடுவே.. மேகதாது அணை பிரச்சினையை கிளப்பும் கர்நாடகாவின் டிகே சிவக்குமார்
பெங்களூர்: மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டினால் இரு மாநிலங்களும் சமமாக பயனடையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர்மட்டம் குறித்தும், மற்ற அணைகளில் நீர் இருப்பு குறித்தும் கூறப்பட்டது. இதையடுத்து இங்குள்ள நீர் கர்நாடக மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் பாசனத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்திற்கு நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் என்று கூறினார். இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். இன்று தமிழகத்தில் கண்டனம் தெரிவித்து சாலை மறியில் ஈடுபட்டனர். மேலும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். தொடர்ந்து இது தொடர்பாக தமிழகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் என்றும், கர்நாடகாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்நாடக அரசை சட்டமன்ற அனைத்து கட்சிகள் கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறுகையில், "மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதால், இரு மாநிலங்களும் சமமாக பயனடையும். தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடப்பது எங்களுக்கு ஆட்சேபம் இல்லை" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications