ஓசூர் விமான நிலையம் எப்போது.. திமுக எம்.பி. வில்சன் கேள்வி.. மத்திய அமைச்சர் பதில் என்ன தெரியுமா?
கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் விகே சிங் பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து கடந்த சில மாதங்களாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நிலவும் மத ரீதியான மோதல்கள், அரசியல் பிரச்சனைகள் காரணமாக பெங்களூரில் இருந்து முதலீடுகள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பாற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஏற்கனவே இது தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இனி வாரம் 2 மணி நேரம் போக்குவரத்து தடை.. மும்பைபோல் ஓசூரில் புது ரூல்ஸ் -இதுதான் காரணம்
முதலீடு
இந்த முதலீடுகள் அதிகமாக தமிழ்நாடு பக்கம் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அழைப்புகளை விடுத்து வருவதால் பல்வேறு முதலீடுகள் தமிழ்நாடு பக்கம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பெங்களூர் எல்லையில் இருக்கும் ஓசூரில் முதலீடுகள் குவியும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வருகிறது.
விமான நிலையம்
முக்கியமாக கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் வேகமாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் பெங்களூரில் இருந்து பல ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஓசூர் நோக்கி நகர்ந்து வருகின்றன. ஓசூருக்கு பல நிறுவனங்கள் வரும் நிலையில் இங்கு உள்நாட்டு விமான நிலையம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தேவை
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவதால் விமான நிலையத்திற்கான தேவை அதிகம் ஆகியுள்ளது. இது ஓசூர் இன்னும் வேகமாக வளரவும் வழி வகுக்கும். இதற்கான டெண்டர் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த விமான நிலையம் தொடர்பாக திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் தொடுத்த கேள்வி ஒன்றுக்கு மத்திய இணை அமைச்சர் விகே சிங் பதில் அளித்துள்ளார்.
என்ன கேள்வி
அதன்படி ஓசூரில் எப்போது விமான சேவை தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங், விரைவில் தமிழ்நாடு அரசு தால் எனப்படும் Taneja Aerospace and Aviation Limited (TAAL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம்தான் விமான நிலையத்தை இயக்க உள்ளது. அதேபோல் பெங்களூர் விமான நிலைய நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தம்
இதில் Taneja Aerospace and Aviation Limited (TAAL) நிறுவனம் தனியார் விமான நிலைய நிறுவனம். அந்த நிறுவனம் விமான நிலைய பணிகளை மேற்கொள்ளும். ஆனால் முதலீடான 30 கோடி ரூபாயை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் பெங்களூரில் இருந்து 150 கிமீ எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விமான நிலையம் எதுவும் தொடங்க கூடாது என்று மத்திய விமான போக்குவரத்து துறையுடன் பெங்களூர் விமான நிலையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
25 ஆண்டுகள்
25 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பெங்களூர் விமான நிலையம் அந்த விதியில் தளர்வுகளை மேற்கொள்ள அனுமதித்து உள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் விதியில் தளர்வுகளை செய்துகொள்ள பெங்களூர் விமான நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் விரைவில் ஓசூரில் விமான சேவை தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். இதனால் ஓசூர் வரும் நாட்களில் விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.