திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்... ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது
சென்னை: மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது. திரிஷ்யம் என்றாலே சஸ்பென்ஸ், திடீர் திருப்பங்கள், ஜார்ஜ்குட்டியின் புத்திசாலித்தனமான திட்டங்கள் என்று ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் நிலையில், மூன்றாம் பாகம் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்குக் காரணம் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் ரிவ்யூதான்.

திரிஷ்யம் 3 சம்பவம்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள திரிஷ்யம் 3, மே 21ஆம் தேதி வெளியானது. முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்த மூன்றாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பு இயல்பாகவே உச்சத்தில் இருந்தது. உலகம் முழுவதும் அட்வான்ஸ் புக்கிங்கே அதிரடி அளவில் நடந்ததாக கூறப்பட்டது.
திரிஷ்யம் 3 கதை என்ன?
இந்தப் படத்தின் கதையைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டரான ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தை காப்பாற்ற தன்னுடைய சினிமா அறிவை பயன்படுத்தி ஒரு கொலை வழக்கிலிருந்து தப்பிக்கிறார். இரண்டாம் பாகத்தில், அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எப்போது வேண்டுமானாலும் மறு விசாரணை வரலாம் என்பதை கணித்து முன்கூட்டியே திட்டமிட்டு தனது குடும்பத்தை பாதுகாக்கிறார்.

ஜார்ஜ் குட்டி பிளான்
இப்போது மூன்றாம் பாகத்தில், ஜார்ஜ்குட்டி வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் பொருளாதார ரீதியாக வளர்ந்திருக்கிறார். தான் எழுதிய கதையை படமாக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். அதே நேரத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார். ஆனால் ஒவ்வொரு வரனும் ஏதோ காரணங்களால் தட்டிப் போகிறது. இதற்குப் பின்னால் என்ன காரணம்? யார் இதற்குக் காரணம்? மீண்டும் ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தை குறிவைத்து யாராவது விளையாடுகிறார்களா? இதற்குப் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கதை.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கடுமையாக பேசியிருக்கிறார். அவரது கருத்துப்படி, திரிஷ்யம் முதல் இரண்டு பாகங்களில் இருந்த சுவாரஸ்யம் இந்த முறை பெரிய அளவில் இல்லை. "படத்தின் முதல் இரண்டு மணி நேரம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருந்தது. கடைசி அரை மணி நேரம் மட்டும் ஓரளவு சுவாரஸ்யமாக இருந்தது" என்று நேரடியாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முந்தைய பாகங்களில் ஜார்ஜ்குட்டி எப்போதும் பிரச்னையை முன்கூட்டியே கணித்து எதிராளிகளை விட இரண்டு படி முன்னால் இருப்பார். ஆனால் இந்த முறை பிரச்னை வந்த பிறகுதான் அவர் நகர்கிறார். அதனால் அந்த மாஸ்டர் பிளான் ஃபீல் மிஸ்ஸாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
படத்தின் மைனஸ்
மேலும், ஜார்ஜ்குட்டிக்கு எதிராக செயல்படும் கதாபாத்திரங்களின் திட்டங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், குறிப்பாக சித்திக் கதாபாத்திரம் மிகப்பெரிய புத்திசாலித்தனமாக செயல்படுவார் என எதிர்பார்த்த இடங்களில் அது பலவீனமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"முந்தைய பாகங்களை பார்த்தவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரு சுமாரான படம் என்ற உணர்வை தரும். நான்காவது பாகத்துக்கு லீட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சரக்கு முடிஞ்சுடுச்சு... இத்துடன் நிறுத்தினால் நல்லது" என்ற அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருபுறம் மோகன்லால் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து வர, இன்னொரு பக்கம் சிலர் அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரிஷ்யம் 3 உண்மையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? அல்லது ப்ளூ சட்டை மாறன் சொல்வது போல மேஜிக் குறைந்துவிட்டதா? என்பதே இப்போது ரசிகர்களின் ஹாட் டாப்பிக்.













Click it and Unblock the Notifications