தவெக ஆட்சியமைப்பதை தடுக்க திமுக, அதிமுக முயற்சித்தது உண்மை.. புட்டு புட்டு வைத்த பெ. சண்முகம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தமிழக அரசியலில் அரைநூற்றாண்டு காலம் திமுக அதிமுக என்கிற பாதையில் தான் பயணித்தது. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
இதை திமுக மறுத்தாலும் அவர்களின் கூட்டணியில் உள்ளவர்களே பல அதிர்ச்சி தகவல்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் தவெக ஆட்சியமைப்பதை தடுக்க திமுக, அதிமுக முயற்சி செய்தது உண்மை தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வார பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில், "நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இரண்டையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். இந்த 2 அணிக்கும் எதிராக தான் தீர்ப்பளித்துள்ளனர். தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைப்பதற்கு சட்டப்படி வாய்ப்புள்ள கட்சியாக அமைந்துள்ளது.
தவெகவுக்கு எதிராக யோசனை
தவெக ஆட்சியமைக்க கூடாது என்பதை தடுப்பதற்காக திமுக ஆதரவுடன், அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது உண்மை தான். அதை நாங்கள் ஏற்கவில்லை. இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. 2 கட்சிகளும் தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக எதிரும் புதிருமாக, எலியும், பூனையுமாக செயல்பட்டுள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்தால், திடீரென இருவரும் இணைந்து ஆட்சியமைப்பது அல்லது ஒரு கட்சி ஆதரவுடன் மற்றொரு கட்சி ஆதரிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அது முற்றிலும் சந்தப்பவாத நிலையாக மக்களால் கருதப்படும். ஆகவே அதை எங்களால் ஏற்க முடியாது. மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் எங்களால் முடியாது என்பதை சொல்லிவிட்டோம். அதைத்தான் எங்களின் பொதுச்செயலாளர் பேட்டியில் கூறினார். இடதுசாரிகள் மற்றும் விசிக யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
இதில் 3 பேர் ஒருமித்தமாக முடிவு எடுக்க முடியாமல், மாற்றி மாற்றி முடிவு செய்தாலும் யாரும் ஆட்சியமைக்க முடியாது. இந்த 6 தொகுதிகள் என்பது, ஆட்சியமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பை இடதுசாரிகளுக்கும், விசிகவுக்கும் கிடைத்துள்ளது. அவர்களின் முடிவை ஆதரிக்க முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டோம். 8 ஆம் தேதி நடைபெற்ற எங்கள் மாநிலக் குழு தீர்மானத்திலும் அதை குறிப்பிட்டுள்ளோம்.
திமுக அதிமுக இப்படி ஒரு யோசனையை முன்வைத்தனர். தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதை எழுத்துபூர்வமாக குறிப்பிட்டு அதை எதிர்த்தோம். இருந்த ஒரே வாய்ப்பு தவெகவுக்கு ஆதரவளிப்பது தான். தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பது என்று முடிவு செய்தோம்" என்று கூறியுள்ளார். சண்முகத்தின் இந்தப் பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications