ஆம், தெரியாது.. முதல் நாள் கேள்விகளுக்கு சசிகலா பதில்.. இன்றும் தொடர்கிறது ஐடி விசாரணை
Recommended Video
பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணையை தொடர்ந்து உள்ளனர்.
ஆபரேஷன் 'கிளீன் மணி' என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான மது பான ஆலை, தொலைக்காட்சி நிறுவனம் என 180 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடைபெற்றது.
5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் 2 நாள் அனுமதி பெறப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரி வீரராகவ ராவ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர். விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரியும் இடம்பெற்றிருந்தார்.
வருமான வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணையில், சசிகலாவிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சொத்துகள், நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த பல கேள்விகளுக்கு சசிகலா, ''ஆம்; இல்லை; தெரியாது; நினைவு இல்லை; எனக்கு தொடர்பு இல்லை; வழக்கறிஞர், தணிக்கையாளர் மூலம் பதில் அளிக்கிறேன்; முறையாக வருமான வரி கட்டப்பட்டுள்ளது'' என சுருக்கமாகவே பதில் அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில், சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணையை தொடர்ந்துள்ளனர். காலை 9.30 மணியளவில் அதிகாரிகள் தரப்பினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், அதற்கான வருமானம் எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட முக்கிய கேள்விகள் அதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது. முதல் நாள் விசாரணையை போன்று, இன்றைய விசாரணையும் சசிகலாவுக்கு பெரும் நெருக்கடியை தரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.