ஒட்டு மொத்த காங்கிரசும் ஜாமினில் தான் இருக்கு.. ராகுல் விமர்சனத்தால் பசவராஜ் பொம்மைக்கு வந்ததே கோபம்
பெங்களூர்: பாஜக குறித்து விமர்சித்த ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'போலி காந்திகளை பற்றி பேச நான் விரும்பவில்லை என்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியுமே பெயிலில் தான் உள்ளது என்றும் பேசியுள்ளார்.
இந்திய ஒற்றுமைப்பயணம் (பாரத் ஜோடா யாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் கடந்த மாதம் 7 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
கர்நாடக கொடியில் ராகுல் படம்: கொதித்தெழுந்த கன்னட அமைப்புகள்.. பாரத் ஜோடா யாத்திரையில் புது சர்ச்சை
ராகுல் காந்தி நடைபயணம்
இதையடுத்து கேரளாவில்19 நாட்கள் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி தற்போது பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தனது யாத்திரையின் போது பொதுக்கூட்டங்களில் பேசிவரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காதி, மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல் கர்நாடகத்தில் ஆளும் பாஜகவையும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
போலி காந்தியை பற்றி நான் பேசவில்லை
இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது:- போலி காந்திகளை பற்றி பேச நான் விரும்பவில்லை. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியுமே பெயிலில் தான் உள்ளது. ராகுல் காந்தி பெயிலில் இருக்கிறார். மரியாதைக்குரிய சோனியா காந்தியும் பெயிலில் தான் உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் அப்படிதான் இருக்கிறார். ஒட்டு மொத்த கட்சியும் பெயிலில் தான் உள்ளது. காங்கிரஸ் ஒரு பெயில் கட்சி. காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
முன்பு ஏடிஎம் போல கர்நாடகா இருந்தது
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அனைவரும் அவரது நலனுக்காவே பணியாற்றி வருகின்றனர். இங்கு (கர்நாடகா) காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அந்த கட்சியின் தலைவர்களுக்கு ஏடிஎம் போல கர்நாடகா இருந்தது. தற்போது அது இல்லாததால் கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். இதனால்தான் பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.
பாஜக அரசு ஊழல் அரசு கிடையாது
தற்போதைய பாஜக அரசு ஊழல் அரசு கிடையாது. ஊழல் முறைகேடுகள் இருந்தால் அதை எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அப்படி கொண்டுவந்தால் உடனடியாக உண்மை நிலையை வெளிக்கொண்டு வர இந்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பாஜக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சோனியா, பிரியங்கா வருகை..
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த மாநிலத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதேபோல் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை கர்நாடக மாநிலத்திற்கு வருகின்றனர். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரும் இருவரும், வரும் 6-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது.