கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்களா? காங்கிரஸ் போடும் செம பிளான்.. ஏன் தெரியுமா? பரபர பின்னணி
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், மூன்று துணை முதல்வர்களை நியமிப்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக பேசப்படுகிறது.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜக 66 இடங்களிலும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைமைக்கு வழங்கி எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர். முதல்வர் யார் என்பதை கட்சி மேலிட பொறுப்பில் விடப்பட்டாலும் இரு தரப்பினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்து போஸ்டர்களையும் கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள்.
கர்நாடகாவில் புதிய அரசு வரும் 17 ஆம் தேதி பதவியேற்கும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே அதற்குள் முதல்வர் மற்றும் அமைச்சரவையில் இடம் பெறுபவர்களின் லிஸ்ட் தயார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, முதல்வராக இருவரில் யாரை தேர்ந்தெடுத்தாலும் 3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம், தலித் சமூகங்களை சேர்ந்தவர்கள் அமோக ஆதரவு அளித்து இருக்கிறார்கள். இதனால், அந்த சமூகங்களில் லிங்காயத், ஒக்கலிகர், முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிலும் கே.எச்.முனியப்பா தனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். கர்நாடக தேர்தல் முடிந்தாலும் முதலவர், துணை முதல்வர் விவகாரங்களினால் கர்நாடக அரசியல் களம் அனல் தணிந்தபாடில்லை.












Click it and Unblock the Notifications