சிங்கம் டைட்டில்... புல்லட் எண்ட்ரி! பாஜக அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு
பெங்களூரு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட திரைப்படமான "அரபி" யின் டீசர் வெளியாகியுள்ளது.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது.
ராஜ்குமார் இயக்கும் அரபி என்ற இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அனுகியுள்ளார்.
அண்ணாமலையின் முதல் படம்
திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முதல் படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி இருக்கிறது. இதில் சிங்கம் அண்ணாமலை ஐ.பி.எஸ். என்ற டைடிலுடன் புல்லட்டில் அவர் எண்ட்ரி கொடுத்து உள்ளார்.

கரூர் டூ கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சொக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை நிறைவு செய்து பொறியாளராக மாறிய அண்ணாமலை, லக்னோ ஐ.ஐ.எம். இல் பட்டம் படித்துவிட்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று காவல்துறைக்குள் நுழைந்தார்.

காவல்துறை
கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணை பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளராக போலீஸ் பணியை தொடங்கிய அண்ணாமலை, 2015 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். 2018 ஆம் ஆண்டில் பெங்களூரு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை அதிரடியான நடவடிக்கைகளால் கர்நாடகாவில் புகழ்பெற்றார்.

விவசாயம்
இதனிடையே 2019 ஆம் ஆண்டு காவல்துறை பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் தொடர்பாக பேசியும், எழுதியும் வந்த அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரஜினி தொடங்கப்போகும் கட்சி அல்லது பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அரசியல் பிரவேசம்
தொடக்கத்தில் அதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் அவரது கருத்துக்களின் மூலம் அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அபிமானி என்பது உறுதியானது. இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர்
இதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2021 ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அண்ணாமலை. தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வரும் அண்ணாமலை, தனது சர்ச்சைக்குறிய பேச்சுக்களின் மூலமாக தமிழ்நாடு மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார்.












Click it and Unblock the Notifications