அசைந்து அசைந்து வந்த பிரமாண்ட தேர்.. ஒரு நொடியில் கவிழ்ந்ததால் அலறியடித்து ஓடிய மக்கள்.. பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் கோவில் திருவிழாவில் நள்ளிரவில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். மக்கள் வெள்ளத்தில் தேர் சென்றபோது திடீரென்று அதன் மேல்பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களின்போது பிரமாண்டமான தேர்களை பக்தர்கள் இழுத்து செல்வார்கள். இந்த தேர்கள் அதிக உயரமாக இருக்கும். இரவு நேர தேர் திருவிழா என்றால் மின்விளக்குகள் ஜொலிஜொலிக்கும்.

இந்நிலையில் தான் நேற்று கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் முல்கியில் உள்ள பாபநாடு துர்கா பரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா நடந்தது. பிரம்மரதோற்சவா என்ற பெயரில் இந்த தேர் திருவிழா நடந்தது.
இந்த விழாவை பார்க்க முல்கி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்ட மக்கள் படையெடுத்து வந்தனர். தேர் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேரின் மேல்புறம் தனியாக வட்டவடிவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் உற்சாகமாக வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து சென்று கொண்டிருந்தனர். மக்கள் வெள்ளத்துக்கு நடுவே தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் தேரின் மேல்பகுதி பாதியாக சரிந்து விழுந்தது. இதை கவனித்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பக்தர்கள் சிலர் மட்டும் லேசான காயமடைந்தனர்.
இதற்கிடையே தான் தேரின் மேல்பகுதி சரிந்த விழுவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தேரின் ஒருபகுதியில் அலங்காரத்துடன் கட்டப்பட்டு இருந்த கயிறு திடீரென்று அறுந்ததும், அதன்பிறகு தான் தேரின் மேல்பகுதி பாதியாக சரிந்து விழுந்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தேர் திருவிழா நடந்த கோவில் என்பது முல்கி டவுன் பாபநாடு கிராமத்தில் ஓடும் ஷாம்பவி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த முல்கி டவுன் என்பது மங்களூரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கடவுளாக உள்ளார். வரலாற்றின்படி இந்த கோவிலை கட்டுவதற்கான பாபா என்ற இஸ்லாமிய வணிகர் பொறுப்பேற்றுள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் பிரம்ம ரதோற்சவம் என்பது நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications