ஒரு கையில் ரவா இட்லி, மறு கையில் வெடிகுண்டு! வெறும் 9 நிமிடம்தான்! ராமேஸ்வரம் கஃபேவில் என்ன நடந்தது
பெங்களூர்: ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் சுமார் 8 பேர் காயமடைந்தனர். பகல் நேரத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த வழக்கை முதலில் பெங்களூர் போலீசார் விசாரித்த நிலையில், இப்போது இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. குண்டு வைத்த நபரையும் அவர் எதற்காக இப்படிச் செய்தார் என்பதையும் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
குண்டுவெடிப்பு: இதற்கிடையே இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பெங்களூரின் ராமேஸ்வரம் கஃபேக்குள் சென்ற அந்த சாம்பல் நிற டி-சர்ட் இளைஞன் ஒன்பதே நிமிடங்களில் வெடிகுண்டை வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் தொப்பி, மாஸ்க் ஆகியவற்றை அணிந்துள்ளார்.

மொபைலில் பேசியவாறே உள்ளே வரும் அந்த நபர் வெடிகுண்டை வைத்துவிட்டு அப்படியே மொபைலில் பேசியவாறே வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே ராமஸ்வரேம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக சில புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் குண்டு வைத்த நபர் பேருந்திலிருந்து இறங்கி, ஓட்டலுக்குள் நுழைவது தெளிவாகத் தெரிகிறது. உள்ளே உணவை ஆர்டர் செய்யும் அந்த நபர் சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியே வந்து மீண்டும் பேருந்தில் ஏறிச் செல்கிறார்.
அவர் உள்ளே வந்து வெடிகுண்டு வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப 9 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. இந்த 9 நிமிடங்கள் என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

11.10am: குண்டு வைத்த அந்த நபர் க்ரே சர்ட்டை, வெள்ளை தொப்பி மற்றும் மாஸ்க் உடன் பேருந்தில் இருந்து இறங்குகிறார்
11.34am: அந்த நபர் வெடிகுண்டு இருக்கும் பையை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் கஃபேவுக்குள் உள்ளே நுழைகிறார்.
11.38am: அவர் உள்ளே ரவா இட்லியை வாங்கிவிட்டு அந்த பையுடன் இருக்கிறார்.
11.44am: ரவா இட்லியை அவர் சாப்பிடவில்லை. அதேநேரம் அவர் வாஷ் பேசின் அருகே செல்கிறார். பிறகு ராமேஸ்வரம் கஃபேவில் இருந்து வெளியேறுகிறார். ஒன்பது நிமிடங்கள் மட்டுமே அவர் ஹோட்டலில் இருந்துள்ளார்.
11.50am: சாலையில் நடந்து செல்லும் அந்த நபர் திடீரென தனது வாட்ச்சை பார்க்கிறார்
12.56am: திடீரென ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்துச் சிதறுகிறது. பலர் காயமடைகிறார்கள்.

தீவிர விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாகச் சுற்றி இருக்கும் சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் அந்த நபர் எங்கிருந்து வந்தார்.. எங்கே சென்றார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுவரை சுமார் 40-50 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதை வைத்து குற்றவாளியின் ரூட் மேப்பை அதிகாரிகள் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அந்த பார்க்க 28 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் போலத் தெரிகிறார். அவர் மொபைலில் பேசியவாறே தான் உள்ளே வந்து சென்றுள்ளார். அப்படி அவர் நிஜமாகவே யாராவது ஒரு நபருடன் பேசியிருந்தால்.. இது டெலிகாம் தரவுகளில் பதிவாகி இருக்கும். எனவே, அந்த தரவுகளைப் பெற்றும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications