உச்சகட்ட பரபரப்பு.. கர்நாடகாவில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா.. ஆட்சி கதி?
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 பேர் கொண்ட சட்டசபையில், பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. ஆட்சியமைக்க தேவை 113 எம்எல்ஏக்கள் பலம். எனவே, காங்கிரஸ் அல்லது மஜதவை உடைத்து, எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைக்க பாஜக பல முறை முயன்றது. ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில், பெல்லாரி மாவட்டத்தின், விஜயநகரா சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ, ஆனந்த் சிங் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜகவிலிருந்து வந்தவர்
2018ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் முன்பாக, பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி வந்தவர் இவர். இப்போது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதை வைத்து பார்க்கும்போது, மீண்டும் பாஜக பக்கம் செல்ல ஆயத்தமாகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் சொல்கிறார்
இதே தொகுதியில், ஆனந்த் சிங், 3 முறை எம்எல்ஏவாகியுள்ளார். பாஜக மூத்த தலைவர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 2008-13ம் பாஜக ஆட்சி காலத்தில், ஆனந்த் சிங், பாஜக ஆட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுடன் உரசல் ஏற்பட்டதால், 2018ல் காங்கிரசில் சேர்ந்தார். இப்போது, தனது தொகுதிக்கு உட்பட்ட சந்தூர் தைலுகாவில், 3667 ஏக்கர் நிலத்தை, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆலைக்கு, குமாரசாமி அரசு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதை கண்டித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
அடுத்த எம்எல்ஏ
ஆனால், மதியம் திடீரென மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெல்காம் மாவட்டம், கோகாக் தொகுதி எம்எல்ஏவான ரமேஷ் ஜார்கிகோலிதான் அது. இவர் பெல்காம் தொகுதியில் முக்கியமான காங்கிரஸ் தலைவர். இவருக்காக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். ரமேஷ் ஆதரவாளர்கள் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
அமெரிக்காவில் குமாரசாமி
இதனிடையே, சொந்த விஷயமாக, அமெரிக்கா சென்றுள்ள, முதல்வர் குமாரசாமி, அங்கிருந்தபடி வெளியிட்ட ட்வீட்டில், நான் இங்கிருந்தபடியே, அங்கே நடப்பதை கவனித்துக் கொண்டு உள்ளேன். ஆட்சியை கலைத்துவிடலாம் என்று, பாஜக பகல் கனவு கண்டுகொண்டு உள்ளது என்று தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் சபாநாயகரையும் சேர்த்து 77ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூரில் அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசின் மிரட்டல்களுக்கு அடி பணிந்து, சிலர் ராஜினாமா செய்திருக்கலாம். ஆனால், ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.