இரவு நடந்து சென்ற ஜோடியிடம் அத்துமீறி தொல்லை! கதறி அழுத மனைவி! அடாவடி பெங்களூர் போலீசார் மீது ஆக்ஷன்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் நள்ளிரவு நேரத்தில் நடந்த சென்ற ஜோடிக்கு அத்துமீறி போலீசார் தொல்லை தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார், சில நேரங்களில் அங்குள்ள பொதுமக்களுக்கும் கூட அத்துமீறி தொல்லை தருவார்கள். நாம் என்ன விளக்கம் சொன்னாலும் கேட்காத அவர்கள், நம்மிடம் இருந்து அபராதம் வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்திருந்ததது. இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு டிரெண்டான நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இளம் ஜோடி
கடந்த வாரம் பெங்களூரில் நள்ளிரவு நேரத்தில் இளம் தம்பதியினர் தங்கள் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நண்பரின் பர்த்டே கேக் கட்டிங் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். அப்போது அந்தப் பக்கம் பிங்க் நிற ஹொய்சாலா கார் வந்துள்ளது. சுரக்ஷா செயலி செயலி மூலமும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலமும் கிடைக்கும் புகார்களுக்கு இந்த பிங்க் நிற ஹொய்சாலா கார்கள் தான் முதலில் பதிலளிக்கும். இந்த கார் தங்கள் அருகே வந்து நின்றதால் முதலில் அந்த ஜோடி சற்று குழம்பிவிட்டனர்.

கதறி அழுத மனைவி
உள்ளே காரில் இருந்து இருவர் இறங்கியுள்ளனர். இந்த தம்பதியை விசாரித்த போலீசார், இரவு 11 மணிக்கு மேல் வீதியில் நடப்பதே விதிமீறல் எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அந்த தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், இரவு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என்பதால் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதற்காகவே காத்திருந்த அந்த போலீசார், 3000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அந்த ஜோடி எவ்வளவோ கெஞ்சியும் கூட போலீசார் விடுவதாக இல்லை. போலீசார் தொடர்ந்து கடுமை காட்டியுள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் மனைவி அழத் தொடங்கிவிட்டார்.

அபராதம்
இதனால் சற்று பின்வாங்கிய போலீசார் 1000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். நடந்து செல்வதற்கு அபராதம் விதிக்கப்பட்டதை அந்த தம்பதியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்த போதிலும் அந்த நள்ளிரவு நேரத்தில் தங்களுக்கு யாரும் உதவப் போவதில்லை என்பதை உணர்ந்த அந்த தம்பதி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டனர். வேறுவழியின்றி 1000 ரூபாய் அபராதத்தை அவர்கள் செலுத்தினர். இந்த சம்பவத்தை விவரித்து ம் கார்த்திக் பத்ரி என்ற அந்த நபர் தனது ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். இது ட்விட்டரில் டிரெண்டானது.

பாயந்தது நடவடிக்கை
போலீசார் தங்களிடம் நடந்து கொண்ட விதத்தால் அன்று தூங்கவே முடியவில்லை என்றும் மறுநாள் வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் போலீசார் மீதான நம்பிக்கை இழக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் நகரின் வடகிழக்கு பிரிவு காவல்துறை துணை ஆணையர் அனூப் ஏ ஷெட்டி நேற்று முன்தினம் இரவு தெரிவித்திருந்தார். இதற்கிடையே 48 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெங்களூர் போலீசார் தெரிவித்தனர்.

சஸ்பெண்ட்
சம்மந்தப்பட்ட காவலர்கள் கண்டறியப்பட்டு, அவர்ககள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெங்களூர் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், "இச்சம்பவத்திற்குக் காரணமான சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் அடையாளம் காணப்பட்டு சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
முன்னதாக கார்த்திக் பத்ரி இந்தச் சம்பவம் குறித்து தனது ட்விட்டரில், "நேற்று முன்தினம் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது நள்ளிரவு 12:30 மணி. நானும் என் மனைவியும் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம் நாங்கள் மான்யதா டெக் பார்க் அருகே வசிக்கிறோம்). நாங்கள் எங்கள் வீட்டிற்கு சில மீட்டர் தொலைவில் வந்துவிட்டோம். அப்போது ஒரு பிங்க் நிற ஹொய்சலா ரோந்து கார் எங்கள் அருகே வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார்கள். எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தெருவில் நடந்து செல்லும் தம்பதியரிடம் ஏன் அவர்கள் அடையாள அட்டையைக் கேட்க வேண்டும்? அப்போது எங்களிடம் மொபைல் மற்றும் கேக் பாக்ஸ் தவிர எதுவும் இல்லை. நல்வாய்ப்பாக எங்களிடம் மொபைலில் ஆதார் ஃபோட்டோக்கள் இருந்தன.

மிரட்டல்
அதை அவர்களிடம் காட்டினோம். அப்போது திடீரென அவர்கள் எங்கள் மொபைலை வாங்கி வைத்துக் கொண்டனர். திடீரென ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்த ஒன்றை எடுத்து எங்கள் பெயர்களையும் ஆதார் எண்களையும் எழுத ஆரம்பித்தார். அப்போது தான் ஏதோ பிரச்சினை என உணர்ந்த நாங்கள், எதற்காகச் சலான் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், "இரவு 11 மணிக்கு மேல் சாலையில் நடக்க அனுமதியில்லை" என்றார். இது அபத்தமாகத் தெரிந்தாலும் கூட வேறு வழியில்லை என்பதால், அப்படி ஒரு விதி இருக்கிறதா? அதுபற்றி எங்களுக்குத் தெரியாது என அமைதியாகவே பதிலளித்தோம். அதற்கு போலீஸ், "உங்களைப் போன்ற படித்தவர்கள் இந்த விதிகளைத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார்கள். அவர்கள் சொன்னதில் நம்பிக்கை இல்லை என்றாலும், பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்தோம்..

நம்பிக்கை இழக்கிறோம்
உடனே எங்களுக்கு 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம், ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை. என் மனைவி கண்ணீர் விடத் தொடங்கினார். தங்களுக்கு எதாவது பிரச்சினை வருமோ என உணர்ந்து சற்று பின்வாங்கினார்கள். எனக்கு மட்டும் அபராதம் விதிப்பதாகச் சொன்னார்கள். இதையடுத்து ரூ.1,000 அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டேன். அந்த நபர் உடனடியாக பேடிஎம் மூலம் அபராதம் செலுத்தினேன். இது சித்தராவதைத் தானே? சாதாரண மக்களை இப்படித்தான் நடத்துவார்களா? சட்டத்தின் பாதுகாவலர்களே சட்டத்தை உடைத்து, மக்களுக்குத் தொல்லை கொடுத்தால் யாரிடம் செல்வது" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications