இரட்டைக் கைக்குழந்தைகளுடன் வாக்களித்த இரு பெண்மணிகள்... பலரும் பாராட்டு
பெங்களூரு: ஜனநாயக திருவிழா எனப்படும் தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், இரட்டைக் கைக்குழந்தைகளுடன் வாக்களித்து இரு பெண்மணிகள் அசத்தி உள்ளனர்.
முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதியன்று 91 தொகுதிகளில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி நடக்கும் 3-ம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், உத்தரபிரதேசத்தில் 8 , மேற்கு வங்கத்தில் 3 , புதுச்சேரியில் ஒன்று, தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், என மொத்தம் 12 மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில், காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக இருந்த நிலையில், நேரம் செல்ல, செல்ல விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இளம் தலைமுறையினர், தங்களது எதிர்காலம் கருதி வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், இரட்டைக் கைகுழந்தைகளுடன், இரு பெண்மணிகள் வந்து வாக்களித்தனர்.
அதே நேரம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தில் புதுமண தம்பதிகள் திருமண கோலத்தில் வாக்களித்தனர். அவர்களது வாக்களிக்கும் கடமையை கண்டு பலரும், பாராட்டினர். நாடு முழுவதும் 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஒட்டுமொத்தமாக வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications