கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ்களின் புது முடிவு.. மணப்பெண்கள் கிடைக்க பாத யாத்திரை..போட்டி போட்டு முன்பதிவு
கர்நாடகா மாநிலத்தில் திருமணம் ஆகாத இளைஞர்கள் ஒன்றுதிரண்டு மணப்பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூர்: 30-வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என புலம்பும் 90 கிட்ஸ்கள் சேர்ந்து தங்களுக்கு மணப்பெண் கிடைக்க புதிய முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து அங்குள்ள ஒரு கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இருக்கிறார்களாம். இது குறித்த செய்தியை விரிவாக இங்கே பார்க்கலாம்.
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் சமூகத்திலும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கே போதும் போதும் என்று ஆகிவிடும்.
நல்ல வேலை, நன்கு செட்டில் ஆக வேண்டும் என்ற திருமணத்தை தள்ளி போடுபவர்கள் ஒரு பக்கம் என்றால் குடும்ப சூழல் காரணமாக திருமணம் தாமதமாகும் நபர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒருபக்கம் பெண் கிடைக்காததால் திருமணம் தாமதம் ஆகி வயது கடந்து புலம்பும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புலம்பி தள்ளும் 90 கிட்ஸ்கள்
அதிலும் 90 கிட்ஸ்கள் பலரும் இந்த சோதனையை தற்போது அனுபவித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். 2 கே கிட்ஸ்கள் கூட கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகள் என குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்ட நிலையில் இன்னும் தங்களுக்கு திருமணம் ஆக மாட்டேன்கிறதே என ஏகத்த்துக்கும் புலம்பி தள்ளும் 90 கிட்ஸ்கள், தங்களின் மன வேதனையை மீம்ஸ்களாகவும் இணையத்தில் போட்டி தாக்கி வருகிறார்கள். 90 கிட்ஸ்கள் தங்களையே ஜாலியாக கலாய்த்துக்கொண்டு இணையத்தில் அடிக்கடி போடும் காமெடி பதிவுகள் இணையத்தில் வேற லெவலில் பரவி ரசிக்க வைப்பதாக இருக்கும். சரி இதெல்லாம் இருக்கட்டும் விஷயத்திற்கு வருவோம்...

கோவிலுக்கு யாத்திரையாக செல்ல முடிவு
கர்நாடக மாநிலம் மாண்ட்யா மாவட்டத்தில் பெண் கிடைக்காததால் திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞர்கள் சேர்ந்து கோவிலுக்கு யாத்திரையாக செல்ல முடிவு செய்து இருக்கிறார்களாம். இந்த செய்திதான் தற்போது 90 கிட்ஸ்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் விவசாய தொழில்கள் நிறைந்தது ஆகும். இந்த மாவட்டத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது.

மணம் முடிக்க பெண்கள் இல்லாததால்
இதன் விளைவை தற்போதுள்ள 90 கிட்ஸ்கள் அனுபவிப்பதாக சொல்லப்படுகிறது. ஆம்.. இந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் 30 வயது தாண்டியும் மணம் முடிக்க பெண்கள் இல்லாததால் இன்னும் சிங்கிளாகவே சுற்றி வருகிறார்களாம். இதனால், தங்களுக்கு திருமணம் நடப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை கையில் எடுத்து இருக்கிறார்கள். அதாவது, எம்.எம் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சாமூண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்ல மணம் ஆகாத இளைஞர்கள் அனைவரும் முடிவு செய்து இருக்கின்றனர்.

200 திருமணமாகாத இளைஞர்கள்
மாண்டியாவில் இருந்து சாமூண்டீஸ்வரி கோவில் சுமார் 105 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு அவர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக 90 கிட்ஸ்கள் சுமார் 200 பேர் நடைபயணமாக செல்ல இருக்கிறார்களாம். இந்த பாத யாத்திரைக்கு "பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை" என்று பெயர் வைத்துள்ளனர். மாத்தூர் தாலுக்காவில் உள்ள கேஎம் டோட்டி என்ற கிராமத்தில் இருந்து இந்த பாத யாத்திரை தொடங்க உள்ளது. வரும் 23-ந் தேதி தொடங்க இருக்கும் இந்த பாத யாத்திரையில் சுமார் 200 திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

3 நாட்களும் 3 வேளை உணவும்
யாத்திரை பற்றிய அறிவிப்பு வெளியிட்ட முதல் 10 நாட்களிலேயே சுமார் 100 இளைஞர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருக்கின்றனர். மணமகள் தேடி நடக்கும் 3 நாட்களும் 3 வேளை உணவும், தங்கும் இடங்களும் இலவசமாக வழங்கப்படும் யாத்திரையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான ஷ்வ் பிரசாத் என்பவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "உரிய வயதில் திருமணம் ஆகாததால் 30 வயதை கடந்த இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த பேரணியை நடத்துகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடத்த திட்டமிட்டோம். ஆனால் அது முடியாமல் போய் விட்டது" என்றார். எது எப்படியோ? 90 கிட்ஸ்களின் வெண்டுதல் நிறைவேறி அவர்களுக்கு திருமணம் நடந்தால் சரிதான் என நெட்டிசன்கள் பலரும் வழக்கம் போல அவர்களை கலாய்த்து பதிவுகளை போட ஆரம்பித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications